பருவ மழை காலத்தில் சளி, இருமல் பிரச்சனையைத் தவிர்க்க முடியாது. அவை தொண்டையையும், மார்பகத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். மூக்கடைப்பும் ஏற்பட்டு சுவாசக் கோளாறு சார்ந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டே சளி, இருமலின் வீரியத்தை கட்டுப்படுத்தலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:
சளி பிரச்சனைக்கு தொண்டை வலிதான் தொடக்க அறிகுறியாக தென்படும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. கல் உப்பை பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும் . அது தொண்டையில் ஏற்படும் கரகரப்பு தன்மையை போக்கும் .தொண்டை வலியையும் குறைக்கும்,.
சளி, இருமலுக்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் சில நாட்களுக்கு முன்பே எட்டிப் பார்க்கும். அப்போது முதலே வெந்நீர் பருகும் வழக்கத்தை பின்பற்ற தொடங்கி விட வேண்டும். கொதிக்கும் நீரில் சிறிதளவு சுக்கு தூள், எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்தும் பருகலாம்.
மார்பு சளி பிரச்சனைக்கு ஆளாகுபவர்கள் தேங்காய் எண்ணெயில் கற்பூரம் கலந்து சூடாக்கி மார்பில் தடவி வரலாம். ஏலக்காய், சீரகத்தை தூளாக்கி அதனுடன் நெய் கலந்தும் சாப்பிட்டு வரலாம் .இதுவும் மார்பு சளியை கட்டுப்படுத்தும்.
காலை வேளையில் சூடான நீரில் லவங்கப்பட்டையை பொடித்து போட்டு அதனுடன் தேன் கலந்து பருகலாம். அதுவும் தொண்டைக்கு இதம் அளிக்கும்.
இஞ்சியை பொடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகுவதும் மார்பு சளியை கட்டுப்படுத்தும்.
சாம்பார் வெங்காயம் மற்றும் இஞ்சியை பொடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து பருகுவதும் சளி தொந்தரவுக்கு நிவாரணம் தரும்.
குங்குமப் பூவை பாலுடன் கலந்து பருகி வருவதன் மூலம் சளி தொந்தரவுக்கு தீர்வு காணலாம்.
மஞ்சள் மற்றும் குறுமிளகுத்தூளை பாலில் கலந்து பருகுவதும் நோய் தொற்றுக்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.
துளசி டீ, ஏலக்காய் டீ போன்றவற்றையும் பருகலாம். இவைகளும் மழைக்கால நோய் தொற்றுகளில் இருந்து காக்கும். சோர்வான மனநிலையில் இருந்தும் மீள வைக்கும்.
கருப்பு ஏலக்காயை உரித்து அதனுள் இருக்கும் விதையை கரகரவென்று மென்று வெந்நீர் குடிக்க நிவாரணம் பெறலாம். .
துளசி இலைகளை புட்டவியலாய் அவித்து பிழிந்த சாறு ஐந்து மில்லி காலை மாலை அருந்தி வர சளியை சரியாக்கும்.
வால்மிளகுப் பொடி கால் கிராம் 100 மில்லி பாலில் காலை, மாலை கொடுத்து வர தொண்டை கம்மல் அகலும்.
ஒரு தேக்கரண்டி வால்மிளகு பொடியை தேனில் கலந்து நாளும் இருவேளை உண்டு வர சளி நீங்கும்.
வால் மிளகு, அதிமதுரம், திப்பிலி, சித்தரத்தை, கடுக்காய் வகைக்கு பத்து கிராம் எடுத்து ஒன்று இரண்டாய் இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக வைத்து காய்ச்சி வடிகட்டி 50 மில்லி நாளும் நான்கு வேளை குடித்து வர இருமல் தணியும்.
வேப்பம் கொழுந்து, ஓமம் , சுக்கு, மிளகு ,பூண்டு, நொச்சிக் கொழுந்து, கறிவேப்பிலை, சிற்றரத்தை ஆகியவற்றை சமனாக எடுத்து தனித்தனியே நெய் விட்டு வதக்கிச் சிறிது உப்பு சேர்த்து மெழுகு பதமாய் அரைத்து வைத்துக் கொண்டு, வயது நோய்க்கு ஏற்ப ஓரிரண்டு மிளகு அளவு நீரில் கரைத்துக் கொடுக்க குழந்தைகளுக்கு மார்பு சளி கரைந்து பசி உண்டாகும். பெரியவர்கள் அளவை கூட்டி சாப்பிட நிவாரணம் கிடைக்கும்.