இறந்தவர் மீண்டு வந்தால் சந்தோசம்தான் –  ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Exclusive.

இறந்தவர் மீண்டு வந்தால் சந்தோசம்தான் – ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Exclusive.

தமிழ்நாட்டில் தற்போதைக்கு சூடாகவும், ‘பசையாகவும்’ இருக்கும் இடம் ஈரோடு கிழக்குத் தொகுதிதான். அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெராவின் திடீர் மறைவைத் தொடர்ந்து வரும் 27 ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்த அமைச்சரவையும், எதிர்கட்சியின் முன்னாள் அமைச்சர்களும் 33 வார்டுகளிலும் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரத்துக்கு கிளம்பும் முன் நமது கல்கி ஆன்லைனுக்காக அளித்த பிரத்யேக பேட்டி:

இடைத்தேர்தலுக்கானப் பிரசார பயணங்கள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது? மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?

தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களுக்கு மேலாக இருக்கிறது. இருந்தாலும் இதற்குள்ளாகவே அனைத்து வார்டுகளிலும் மக்களைச் சந்தித்திருக்கிறோம். இரண்டாவது முறையாகச் சந்திக்க இருக்கிறோம். செல்கின்ற இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு மிகப் பிரமாதமாக இருக்கிறது. கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை நூற்றுக்கு நூறு சதவிகிதம் இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதிகள், பிரசார யுக்திகள் எப்படி இருக்கின்றன?

பிரசார யுக்தி என்பதை விட அந்ததந்த பகுதிகளில் இருக்கின்ற குறைகளை குறிப்பாக சாலை வசதியின்மை, சாக்கடைகள் தூர்வாராமல் இருத்தல், பட்டாக்கள் கிடைக்கவில்லை போன்ற குறைபாடுகள் இவற்றை யெல்லாம் தீர்த்து வைக்க மறைந்த என் மகன் திருமகன் ஈவெரா ஏற்கனவே அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, நானும் இந்தத் தேர்தல் முடிந்த பிறகு ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துச்சாமியோடு இணைந்து அதிகாரிகளைச் சந்தித்து நடவடிக்கை எடுப்பேன். தேவைப்படும் பட்சத்தில் முதலமைச்சரையும் சந்தித்துப் பேசுவேன்.

ஈரோடு தொகுதியில் பதினெட்டாயிரம் விசை தறிகள் இயங்கி வருகின்றன. ஆனால், மின்சாரமும், மின் கட்டணமும் அவ்வளவு பிரகாசமாக இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே? 

ப்படிச் சொல்லுவார்கள். ஆனால், மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் ஏற்கனவே விசைத்தறி உரிமையாளர் களிடம் பேசியிருக்கிறார். அவர்களுடைய சங்கத்திலும் நாங்கள் எல்லாரும் பேசி இருக்கிறோம். விவசாயிகளுக்கு மின்சார கட்டணத்தில் சலுகைகள் தரப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கான மின் யூனிட்டுகள் அதிகப்படுத்தப் பட்டிருக்கின்றன. அறிவிப்புகள் தேர்தல் முடிந்த பிறகு வரும்.

தொகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையோடு ஒரு நம்பர் லாட்டரி பிரச்னையும் இருக்கிறதே…

துபற்றி முழுமையாக எனக்குத் தெரியவில்லை. லாட்டரி என்பது எல்லா இடங்களிலும் இருக்கக்கூடிய விசயம். இங்கு அதிகமாக இருக்கிறதா என்ற நிலவரம் தெரியவில்லை. அது குறித்து அறிந்த பிறகு மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரே தொகுதிக்காக திமுக அமைச்சரவை மொத்தத்தையும் களம் இறக்கியிருக்கிறது. அதேவேளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அதிகளவில் தொகுதிக்கு வரவில்லை என்கிற குற்றச்சாட்டு உருவாகியுள்ளதே…?

து ஒரு தவறான தோற்றம். ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், குண்டுராவ் போன்ற பல தலைவர்களும் இங்கு பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரத்துக்கு வருவதில்லை என்ற பொய்யான புரளியை பாரதிய ஜனதா கட்சியும், அதிமுகவும் கிளப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த தேர்தலின் போது உள்ளாட்சிகளில் தனியாக வசூலிக்கப்படும் குப்பை வரிகள் நீக்கப்படும், சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லையே…

(திருமகன் ஈவெரா) யாரிடம் வாக்குறுதி கொடுத்தார், எப்போது கொடுத்தார் என்ற விபரத்தை நீங்கள் சொல்ல வேண்டும். வாக்குறுதி கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும். சாயப்பட்டறையிலிருந்து வருகின்ற கழிவுநீரை விவசாயிகள் பயன்படுத்தும் அவலநிலையை நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் கழிவுநீரை கடலில் போய்ச் சேர்க்க வேண்டும் என்கிற திட்டத்தை முன் வைத்து அதிகாரிகளிடம் பேசி இருக்கிறார். நீங்கள் சொல்வது போல வாக்குறுதி கொடுக்கவில்லை. ஆதாரத்தோடு நிரூபித்தால் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்.

ஈரோடு கிழக்கில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகார் குறித்து?

துபற்றி ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமாகச் சொல்லிவிட்டார். புள்ளி விபரத்தோடு காட்டி 61 வாக்குகள்தான் வித்தியாசம் இருக்கிறது என்று நிருபர்களிடம் சொல்லி விட்டார். திரும்பத் திரும்ப இதைக் கேட்பது விஷம பிரச்சாரமாகும்.

விதிகளை மீறி திமுக செயல்படுவதாகவும், தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்தால் நீங்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவீர்கள் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொல்லியிருக்கிறாரே…

தோல்வி அடையப்போகிறோம் என்றால் சில அரசியல் கட்சிகள் அப்படித்தான் சொல்லுவார்கள். மக்கள் எங்களை விரும்பவில்லை. அதனால் தோற்றோம் என்று சொல்ல மாட்டார்கள். மாறாக,  தேர்தல் விதிகள் மீறப்பட்டன. பணத்தால் மக்களை வசியப்படுத்தி விட்டார்கள் என்று ஏதாவது காரணத்தைச் சொல்லுவார்கள். தோற்கும்போது இதுபோன்ற காரணங்களைச் சொல்லுவது வாடிக்கைதான். அதை இந்தத் தேர்தலிலும் அதிமுக செய்கிறது.  ஈரோடு கிழக்கில் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். இது அனைவரும் அறிந்ததே! அதைச் சகிக்க முடியால் இப்படி புரளி பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து…

றந்தவர் மீண்டு வந்தால் சந்தோசம்தான்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரியும்கூட, பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சிதான். மீண்டும் வந்தால் அவரைச் சந்திப்பேன் என்று சொல்லியிருக்கிறார். இது தேர்தல் காலம் என்பதால் கோபம் குறைந்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாமா?

து அவருடைய கருத்து. இது என்னுடைய கருத்து. தேர்தல் காலம் என்பதால் முன்னுக்கு முரணாகச் சொல்வதில்லை. இறந்தவர் என்று சொல்லப்படக் கூடியவர் மீண்டு வந்தால் அனைவரும் மகிழத்தானே செய்வார்கள்.

தொகுதிகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பத்து பிரச்னைகளை பட்டியலிட்டுக் கொடுங்கள் என எம்.எல்.ஏ.,க்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில்,  ஈவெரா திருமகன் அனுப்பியிருந்த பட்டியலில் இருந்து இரு பிரச்சினைகள் மட்டும் சரிசெய்யப்படும் தருவாயில் இருக்கிறது. மீதி எட்டும் நிலுவையில் இருக்கிறது. இது தேர்தலில் எதிர்மறை அலைகளைக் கிளப்புமா?

ற்கனவே என் மகன் அதை முதலமைச்சரிடம் கொடுத்து விட்டார். அதன் நகல் என்னிடம் இருக்கிறது.  அதை நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்துவேன். பத்து பிரச்சினைகளை அவர் கேட்டு இரண்டு மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. இந்த கால அவகாசத்தில் ஒன்றிரண்டைத் தான் நிறைவேற்ற முடியும். பத்தையும் நிறைவேற்ற இன்னும் கொஞ்சம் காலம் வேண்டும். அவை அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கு ஆவன செய்வேன் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?

(சிரிக்கிறார்) வரது பயணம் என்பது இந்தியா முழுவதும் எதிரொலிக்கும். அடுத்த வருடம் நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அவர்களை வீட்டுக்கு அனுப்பும்.

தந்தை மகனுக்காற்றும் உதவி என இந்த நேரத்தில் நீங்கள் நினைப்பது…

திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணிகளை நான் நிறைவேற்றி முடிக்க வேண்டும். உலக வழக்கு என்பது, தந்தைக்கு மகன் செய்யக் கூடிய பணியாகத்தான் இருக்கும். ஆனால் என் விசயத்தில் இதை தந்தை மகனுக்கு செய்யக் கூடிய கடமையாக நினைத்து அவன் விட்டுச் சென்றப் பணிகளை முழு உத்வேகத்தோடு உழைத்து செய்து முடிப்பேன்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com