விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

நேர்காணல்!
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

மிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5   சதவீத இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்கள் பெற்று  மருத்துவப் படிப்புகளான எம் பி பி எஸ், பி டி எஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையம் வீரகவுண்டனூரை சேர்ந்தவர் மாணவி கிருத்திகா. இவர் கடந்த முறை எழுதிய  நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கவுன்சிலிங்கில் சீட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளார். ஆனால் மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்து தேர்வு எழுதி மாநில அளவில் முதலிடம் பிடித்தது சிறப்பு.

இவரது தாயார் கலைச்செல்வி ஆத்தூர் நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார். தமிழக அளவில் முதலிடம் பிடித்து தற்போது வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் கிருத்திகாவை கல்கி ஆன்லைனுக்காக சந்தித்தோம். உடன் சாதனைக்கு காரணமான அவரது தாயும் இருந்தார்.

சாதனை குறித்து மாணவி கிருத்திகா “நான் மூன்றாம் வகுப்பு வரை பள்ளிக்கே சரியாக சென்றதில்லை. காரணம் பெற்றோருக்கிடையில் வந்த பிரச்சினை. மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை அரசு வீரகவுண்டனூரில் உள்ள துவக்கப் பள்ளியில் படித்தேன். ஆறாம் வகுப்பிலிருந்து பிளஸ் ஒன் வரை பெத்தநாயக்கன் பாளையம் அரசுப்பள்ளியில் படித்தேன். அங்கிருந்து நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் அரசு கல்வித்துறை மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டு சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ சேர்ந்து, நீட் பயிற்சிக்காக அரசினால் துவங்கப்பட்ட நியூ மாடர்ன் ஸ்கூல் பள்ளியில் பயிற்சியும் அளிக்கப்பட்டது. என்னைப் போல் எண்பதுபேர் அங்கு பயிற்சி எடுத்தோம். முதல் பேட்ச் அது. அதில் நாற்பது பேர் மாணவிகள்  நாற்பது பேர் மாணவர்கள். அதில் பயிற்சி பெற்றவர்கள் பலர் தேர்வில் தேர்வு பெற்று இன்று மருத்துவம், ஐஐடி, அண்ணா யுனிவர்சிட்டி என்று சீட் கிடைத்து படித்து வருகின்றனர்.

அதில் பெற்ற பயிற்சியுடன் நானும் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியதில் 211 மதிப்பெண் மட்டுமே பெற்றதால் கவுன்சிலிங் சீட் கிடைக்கவில்லை. அதனால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் விடாமுயற்சியாக தொடர்ந்து படித்தேன்.  இப்போது அதே தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதல் மாணவியாக வந்துள்ளேன். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த ஒரு வருடமாக வெற்றி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு வேறு சிந்தனை இன்றி படித்தேன். இதற்கு என் அம்மாவுக்குத்தான் முதல் நன்றி. நீட்டில் நான் தேர்வு பெற எனக்கு ஊக்கம் தந்து கொண்டே இருந்தார். அடுத்து என்னை வழிநடத்திச்  சென்ற ஆசிரியர்களுக்கு நன்றி. என்னதான் படித்தாலும் முறையான பயிற்சி வேண்டுமே. அடுத்து இட ஒதுக்கீடு தந்த தமிழக முதல்வருக்கும் நன்றி.

நீட் தேர்வில் வெற்றி பெற வசதிகள் மட்டும் போதாது. அதையும் தாண்டி அதீத ஆர்வமும் பயிற்சியும் வேண்டும். எங்கள் கிராமத்தில் பாட்டி அம்மா போன்றவர்கள் உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவமனை செல்லாமல் அவர்களாகவே மருந்துகள் வாங்கி சாப்பிடுவார்கள், காரணம் வசதியின்மை. இதன் காரணமாகவே எனக்குள் மருத்துவர் கனவு விதை விழுந்தது.  மருத்துவராகி எனது கிராமத்தில் மருத்துவம் பார்ப்பதே என் இலட்சியம். இனி எனக்கான பயணமும் அதுவே.

குழந்தைகளுக்கான மருத்துவப் படிப்பில் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் கூறுகிறார். இப்போதே மேல் படிப்புக்கான தேர்வை சொல்லும் கிருத்திகாவிற்கு அவரின் கனவு நிஜமாக வாழ்த்துக்கள் சொன்னோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com