- சந்திரமெளலி
தமிழ் பத்திரிகை வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஓவியர்களில் ஒருவரான மாருதி காலமானார். அவருக்கு வயது 86. கல்கி உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகளிலும் சிறுகதைகளுக்கும், தொடர் கதைகளுக்கும் அழகிய ஓவியங்கள் வரைந்து இலக்கியவாதிகளின் படைப்புக்களுக்கு அழகூட்டியவர் ஓவியர் மாருதி. ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட மாருதி புதுக்கோட்டையில் பிறந்தவர். மூத்த ஓவியர் கே. மாதவனை தனது மானசீக குருவாகக் கொண்டவர். ஓவியர் நடராஜனிடம் ஓவியம் பயின்றவர். வேலை தேடி சென்னைக்கு வந்த புதிதில் பேனர் ஓவியங்கள் வரைந்தவர். குமுதம் மூலமாக பத்திரிகை உலகத்துக்கு அறிமுகமானவர். உளியின் ஓசை, பெண் சிங்கம் ஆகிய படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்திருக்கிறார். புதுக்கோட்டை இலக்கியப் பேரவை இவருக்கு ஓவியக் கலைமாமணி என்ர விருதினை அளித்து கௌரவித்தது.
மராட்டிய மாநிலம் புனே நகரில் தனது மகளுடன் வசித்து வந்த ஓவியர் மாருதி, உடல்நலம் குன்றி 27 ஜூலை 2023 அன்று பிற்பகல் காலமானார்.
-சுப்ரபாலன்
நல்ல மனிதர். எங்கள் ஊர்க்காரர். என் சிறுகதை ஒன்றுக்கு ஓவியர் மாருதி வரைந்த சித்திரம் கல்கி ராஜேந்திரன் அவர்களால் பாராட்டப்பட்டது. "உங்கள் சித்திரம் கதையை உடனே படிக்கத்தூண்டுகிறது" என்று ஆசிரியர் எழுதியிருப்பதாக மாருதி என்னிடம் சொன்னார். 'கண்ணியிலிருந்து தப்பிய மான்!' என்ற கதை.