அவமானங்கள்தான், நம்மை திசை மாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்த அவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்ப கட்ட அடித்தளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கான படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும்.
நம்மை அவமானப்படுத்துவோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு.
உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு செயலில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்து தான் ஆகவேண்டும்.
உங்களுடைய குறைகளை சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியை பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்!
ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... 'நம்மை இவ்வளவு அவமானப்படுத்து கின்றனரே...' என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்.
அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றியாளர் களும் உருவாகி இருக்க மாட்டார்கள்.
எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள் தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தை கண்டு சோர்ந்து போய்,அந்த செயலில் இருந்து விலகி விடுவது...
ஒரு முறை அன்னை தெரஸா,தொழுநோயாளிகளுக்கு உதவுமாறு கொல்கத்தா கடை வீதியில் உள்ள கடைக்காரர் ஒருவரிடம் உதவிகோரிய போது, அவர் உமிழ்நீரை காரி துப்பினார்.
அந்த அவமானத்தை சகித்துக்கொண்ட அன்னை தெரஸா, இது எனக்கு நீங்கள் அளித்தது, என்னிடம் அடைக்கலம் புகுந்துள்ள நோயாளிகளுக்கு உதவுங்கள் என மீண்டும் அன்பாக கேட்டுள்ளார். அன்னை தெரஸாவின் முகம் கோணாத தன்மையை பார்த்து அந்தக் கடைக்காரர் நிதியுதவி செய்ததுடன் தன் தவறுக்கு வருத்தமும் கோரியது வரலாறு.
நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும்போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத்தான் செய்யும் நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு செயலில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்துதான் ஆகவேண்டும். அவமானங்கள்தான் வெற்றியின் முதல்படி என்று எண்ணி முன்னேறுங்கள்.