"ஓய்வு என்பது ஒரு வேலையைச் செய்து முடித்த பின்னர் ஓய்ந்து இருப்பது என்பல்ல, ஒரு வேலையை முடித்து விட்டு, அதற்கு முற்றிலும் மாறுபட்ட வேறொரு வேலையில் ஈடுபடும் போது இயற்கையாகவே மூளையின் அயர்வு நீங்கி புத்துணர்வு பெறுகிறது. இது தான் ஓய்வு, அதாவது மூளைக்கு ஓய்வு கிடைக்கிறது.
நேரம் போதவில்லை என்று சதா முணுமுணுக்கும் ஆசாமிகளுக்கு ஒரு சோதனை வைத்துப்பாருங்கள்.
எந்த நேரத்தில் "ஓய்வு இல்லை" என்று வழக்கமாக சொல்லுகிறார்களோ அவர்கள் மீது ஒரு வழக்கு போட்டு அதே நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகி வாக்கு மூலம் தர வேண்டும், கோர்ட்டுக்கு வர தவறினால் கடுமையான தண்டனை உண்டு என்று செய்து விடுங்கள்.
எப்போது நேரமே இருப்பதில்லை என்று இவர்கள் கூறுகிறார்களே, அதே நேரத்தில் அவர்கள் அலறியடித்துக் கொண்டு கோர்ட்டில் வந்து நிற்பார்கள்.
இக்காலத்து இளைஞர்களுக்கு நடிகைகளைப்பற்றி தெரிந்திருக்கிற அளவுக்கு, இலக்கிய கருத்துக்களை தெரிந்திருப்பதில்லையே! என்று ஒரு முறை தீபம் நா. பார்த்தசாரதி அவர்களிடம் கேட்டபோது அவர் கூறியது:
பீடி, சிகரெட் விற்பனையாகிற அளவு குங்குமப்பூ விற்பனை ஆகாது. அதனால் குங்குமப்பூவின் மதிப்பு குறையவில்லையே!
ஒரு சமயம் ஒருவர் தந்தை பெரியாரை சந்தித்து, "ஐயா பொது நலம் என்றால் என்ன? "என்று கேட்டார்.
" மழை பெய்கிறதே! அது பொது நலம்! "என்றார் பெரியார்.
" சுயநலம் என்றால் என்ன? " என்று மீண்டும் கேட்டார் அந்த மனிதர். அதற்கு பெரியார். "மழை பெய்யும் போது நீ குடை பிடிக்கிறாய். அது சுயநலம்." என்றார்.
கலைவாணர் என். எஸ். கே சோவியத் ரஷ்யா சென்ற போது அங்கு ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். " காந்தியமும் கம்யூனிசமும் மனிதனுடைய மகிழ்ச்சியை குறிக்கோளாகக் கொண்டுள்ளன. ஆனாலும் இரண்டிற்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. காந்தியம் அந்த குறிக்கோளை நோக்கி ஆபத்தில்லாத இரயிலில் அழைத்துச் செல்கிறது. ஆனால், கம்யூனிசம் ஆபத்து மிகுந்த ஜெட் விமானத்தில் அழைத்துச் செல்கிறது "என்று விளக்கினார்.
கிரேக்க தத்துவ ஞானி சோலோன் ஒரு நாள் ஏதென்ஸ் நகரத்தின் பிரதான மைதானத்தில் நின்று கொண்டு கையில் ஒரு அழுகிப்போன ஆப்பிளை காட்டி இதனால் ஏதேனும் பயனுண்டா? என்று மக்களைப் பார்த்து கேட்டார். எல்லோரும் "இது குப்பையில் தூக்கிவீசத்தான் லாயக்கு" என்றனர்.
ஆனால் சோலோன் "நிச்சயமாக இதனால் பயனுண்டு. பழம் அழுகி இருந்தாலும் இதனுள் நல்ல விதைகள் உண்டு. அது எதிர்காலத்தில் பல நல்ல கனிகளை தரும். சமூகம் அழுகிப்போன நிலையில் இருக்கும் கனி என்றாலும், குழந்தைகள் நல்ல பலன் தரும் விதைகள் போல " என்றார்.
"விலங்குகளோடு வாழ்வதற்கு எனக்கு அச்சமில்லை, ஏனெனில் விலங்குகள் திருப்திக்கும்,அமைதிக்கும் சான்றுகளாக இருக்கின்றன. அவை மனத் துயர் அடைவதில்லை. இரவில் கவலையுடன் நெடுநேரம் கண்விழித்து யோசனை எதுவும் செய்வதில்லை. ஒன்றை இன்னொன்று அடி பணிந்து வணங்குவதுதில்லை. விலங்குகள் பொறாமைக்கு ஆட்படுவதில்லை. பெருமைக்கு ஆளாவதில்லை. மகிழ்ச்சியற்றுப் போவதில்லை.
இரவு நேரங்களில் ஆற்றங்கரையோரம் தனிமையில் அமர்ந்து சிந்திப்பார் ஞானி பால் செம். இது பற்றி ஒருவர் கேள்வி கேட்ட போது ஞானி சொன்னது " நான் என்னை காவல் புரியவே இங்கு அமர்கிறேன். ஒவ்வொரு நாளும் எனக்குள் புகுந்து மாசு படுத்தும் அழுக்கு எண்ணங்களை அப்புறப்படுத்துவது என் காவல் பணி. அமைதியான சூழலில் மனதை காப்பதே சிறப்பாக வாழ உகந்தது. பூங்கா, இனிய தென்றல் வீசும் வயல் வெளி எல்லாம் அமைதியை கொண்டு வரும், நல்ல புத்தகங்கள் வாசிப்பதும் இனிமை தரும், இதமான இசையும் இதற்கு உறு துணையாக அமையும்.
"யார் விவேகி? " என்று ஸ்ரீ ரமணரின் ஒரு பக்தர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு "போதுமென்ற மனம் யாருக்கு வாய்த்து இருக்கிறதோ அவரே விவேகி " என்று பதிலளித்தார் ஸ்ரீ ரமணர்.