டோக்ளா
டோக்ளா

குஜராத் ஸ்பெஷல் டோக்ளா!

டோக்ளா என்ற ரெசிபி குஜராத் மாநிலத்தில் தோன்றிய ஒரு உணவு இதனை காலை உணவாகவோ அல்லது சிற்றுண்டியாகவோ எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக தமிழ் நாட்டில் இது இனிப்புக் கடைகளில் கிடைக்கும்.

இதனை அரிசி மாவு மற்றும் பொட்டுக்கடலை மாவு கொண்டு செய்யப்படுகிறது. பல வகையான டோக்ளாக்கள் உள்ளன. பருப்பு டோக்ளா, பட்டர் டோக்ளா ,இட்லி டோக்ளா என்று பலவகை டோக்ளாக்கள் உள்ளன. சற்று வித்தியசமான டோக்ளாக்களை ஒரு முறை செய்து சுவைத்துப் பாருங்கள்.

டோக்ளா
டோக்ளா

இந்த குஜராத் ஸ்பெஷல் டோக்ளாக்களை வீட்டிலேயே சுவையாக மற்றும் எளிமையாக எப்படி செய்வது ?

தேவையான பொருட்கள்:

  • கடலைமாவு - 2 கப்

  • புளித்த தயிர் - 1 1/2 கப்

  • இஞ்சித் துண்டு - 1

  • பச்சை மிளகாய் - 2

  • கடுகு - 1/2 டீஸ்பூன்

  • சீரகம் - 1/2 ஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்

  • பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

  • துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்

  • சோடா உப்பு - 1 சிட்டிகை

  • கொத்தமல்லி - சிறிது

  • எண்ணெய் - தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு மற்றும் புளித்த தயிர் சேர்த்து கட்டியில்லாமல் அடித்து கரைத்துக் கொள்ளவும். அதில் மிளகாய்த்தூள், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும்.

பின் தட்டில் சிறிது எண்ணெய் தடவி இந்த கலவையை போட வேண்டும். அடுப்பில் ஒரு இட்லி சட்டியோ அல்லது வேறு ஒரு பாத்திரமோ வைத்து அதில் கலவை உள்ள தட்டை வைத்து , ஆவியில் சுமார் 15 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.

பின் அடுப்பை ஆப் செய்து விட்டு அதனை ஆற வைக்க வேண்டும். ஆறிய பின் எடுத்து அதனை துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும்.. அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் கடுகு, இஞ்சி, சீரகம்,பெருங்காயதூள் மற்றும் பச்சை மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும். தாளித்ததை வெட்டி வைத்துள்ள துண்டுகளில் மேல் போட வேண்டும்.

இறுதியாக இதன் மேல் துருவிய தேங்காய் மற்றும் மல்லி தழையை தூவினால் சுவையான குஜராத்தின் பாரம்பரிய டோக்ளா ரெடி!!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com