
நமது உணவுப் பழக்கத்தில் பெரும்பாலானோர் சட்னி சேர்த்துக் கொள்வது வழக்கம். தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி, கார சட்னி என்று நிறைய சட்னி வகைகள் செய்கின்றனர். இப்படி சுவையான சட்னி தயார் செய்ய சில யோசனைகள் இங்கே உங்களுக்காக...
தேங்காய் சட்னி அரைக்கும் போது தேங்காய் துருவல் பதமாக ரொம்பவும் இளசாக இல்லாமல், கொப்பரையாகவும் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
தேங்காயுடன் வேர்க்கடலை அல்லது முந்திரிப் பருப்பு ஒன்றிரண்டு சேர்த்து அரைக்க சுவை நன்றாக இருக்கும்.
எந்த வகை சட்னி செய்தாலும் சிறிது வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைக்க மணமாக இருக்கும்.
சிவப்பு மிளகாயை தயிர் அல்லது மோரில் ஊறவிட்டு அதை சட்னி செய்யும் போது உபயோகிக்க காரம் இல்லாமல் சுவையில் அசத்தும்.
தேங்காய் சட்னி செய்யும் போது சின்ன வெங்காயத்தை கடைசியாக அரைத்து எடுக்க சுவையாக இருக்கும்.
புதினா, கொத்தமல்லி சட்னி செய்யும் போது சிறிது சர்க்கரை அல்லது ஆம்சூர் பவுடர் சேர்த்து அரைக்க நிறம் மாறாமல் சுவையாக இருக்கும்.
கத்தரிக்காய் சட்னி, தக்காளி சட்னி செய்யும் போது கறுப்பு உளுந்தை எண்ணையில் வறுத்து, கொரகொரப்பாக அரைத்து எடுக்க சுவையாக இருக்கும்.
புதினா, மல்லி சட்னி செய்யும் போது உப்பை சேர்க்காமல் அரைத்து எடுத்து சாப்பிடும் போது சேர்த்துக் கொள்ள நிறம் மாறாமல் சுவையாக இருக்கும்.
காரச்சட்னி அரைக்கும் போது சிகப்பு மிளகாயின் விதையை நீக்கிவிட்டு அரைக்க காரம் தெரியாது.
காஷ்மீரி மிளகாயை ஒன்றிரண்டு சட்னி செய்யும் போது சேர்த்து அரைக்க நிறம் அதிகரிக்கும்.