கொண்டைக்கடலையை ஊற வைத்ததும், வெயிலில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து பிறகு வேக வைத்தால் சுருக்கம் இன்றி சுண்டல் பெரிது பெரிதாக இருக்கும்.
சுண்டலுக்கு தேங்காய் துருவலை வறுத்துப் போட்டால் ஊசிப் போகாது. கொப்பரை துருவலையும் பயன்படுத்தலாம்.
கேரட், பீட்ரூட் துருவல்களை சுண்டலில் சேர்த்தால் நிறம் அழகாக இருக்கும். சத்தும் கிடைக்கும்.
சுண்டலுக்கு தானியங்களை ஊற வைக்கும்போது சிறிது சமையல் சோடா சேர்த்து விட்டு, பிறகு கழுவி வேறு நீரில் வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். சோடா தேவை இல்லை.
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு சுண்டல்களுக்கு முன்பே ஊற வைக்க வேண்டியது இல்லை. அப்படியே களைந்து வேக வைக்கலாம்.
சுண்டலில் மாங்காய் பொடி (ஆம்ச்சூர்) சேர்த்தால் சுவை கூடும்.
சிறுதானியங்களில் சுண்டல் செய்தால் சத்து நிறைய கிடைக்கும்.
தனியா, வற மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயம், வெள்ளை எள் ஆகியவற்றை வாணலியில் தனித்தனியாக வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு எந்த வகை சுண்டலிலும் சேர்க்கலாம் சுவையும் மணமும் கூடும்.
கடலைப்பருப்பை வேகவைத்து தேங்காய் துருவல், வெல்லப் பொடி, ஏலக்காய் பொடி சேர்த்து இனிப்பு சுண்டல் செய்யலாம். இது ஹயக்ரீவருக்கு பிடிக்கும் என்பதால், வியாழக்கிழமைகளில் அல்லது விஜயதசமி அன்று நைவேத்தியம் செய்யலாம்.
பச்சைப் பயறை வேக வைத்து வெல்லப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி கலந்தும் இனிப்பு சுண்டல் செய்யலாம்.
குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதால் சுண்டல்களில் சீஸ் துருவல் சேர்க்கலாம்.
பட்டாணி சுண்டலுக்கு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் சுண்டலின் சுவை, மணம் கூடும்.
-ஆர். பத்மப்ரியா -எஸ். ராஜம்