புரோட்டின் நிறைந்த கிராமத்து பருப்பு குழம்பு!
நீங்கள் இதுவரை பல வகையில் பருப்பு குழம்பு செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு முறை கிராமத்து ஸ்டைலில் இந்த பருப்பு குழம்பு செய்து சாப்பிட்டுப் பாருங்கள் ருசி அட்டகாசமாக இருக்கும்.
இதை நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்டீல் அல்லது அலுமினிய பாத்திரத்தில் செய்வதற்கு பதிலாக, மண் சட்டியில் செய்தால் சுவை மேலும் தூக்கலாக இருக்கும். மண்சட்டி இல்லாதவர்கள் சாதாரண பாத்திரத்திலும் செய்து சாப்பிடலாம் சுவையில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 2
தேங்காய் - 2 துண்டுகள்
துவரம் பருப்பு - 250 கிராம்
மஞ்சள் - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு
சீரகம் - ½ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கடுகு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் தேங்காய், மஞ்சள், சீரகம், வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வேகவைத்த பருப்பில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாகக் கடைய வேண்டும். அடுத்ததாக மற்றொரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, கடுகு, பெருங்காயம் சேர்த்து, கடைந்த பருப்பு கலவையை ஊற்றி தாளிக்க வேண்டும்.
இது நன்கு கொதித்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான கிராமத்து பருப்பு குழம்பு தயார். விருப்பம் உள்ளவர்கள் இதில் நெய் சேர்த்துக் கொண்டால் சுவையும் மணமும் மேலும் தூக்கலாக இருக்கும்.
இந்த பருப்பு குழம்பு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே புரோட்டின் சத்தைக் கொடுக்கக் கூடிய சிறந்ததொரு உணவாகும். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இது சுவையுடன் இருப்பதால், உடனடியாகத் தயாரித்து பரிமாறலாம்.