என்னதான் நம் வீட்டில் வகை வகையாக சமையல் செய்து கொடுத்தாலும், கல்யாண பந்தியில் நாம் சாப்பிடும் சமையல் ருசிக்கு இணையாக வருவதில்லை. குறிப்பாக இந்த சேனைக்கிழங்கை வீட்டில் பொரியல் செய்வதிலும், திருமண நிகழ்வுகளில் பொரியல் செய்வதிலும் பல சுவை வேறுபாடுகள் உள்ளன. இந்தப் பதிவில் கல்யாண வீட்டில் செய்வது போல சேனைக்கிழங்கு பொரியல் வீட்டிலேயே எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - நறுக்கியது 2 கப்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - ½ கப்
பூண்டு - 4 பல்
சீரகம் - ½ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சேனைக்கிழங்கை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் சிறிய பாத்திரம் ஒன்று வைத்து அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சேனைக்கிழங்கு துண்டுகளை வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது நன்றாக காய்ந்ததும் கடுகு போட்டு வேகவைத்த சேனைக்கிழங்கு, கருவேப்பிலை, உப்பு சேர்க்கவும். பின்னர் தேங்காய் துருவல், பூண்டு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து அந்த கலவையை சேனைக்கிழங்குடன் சேருங்கள்.
அனைத்தையும் நன்றாகக் கிளறி மீண்டும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு பொரியல் தயார். இது நம் வீட்டில் செய்யும் பொரியலை விட சுவை கூடுதலாக இருக்கும்.