சரணாகதி பலன்!

சரணாகதி பலன்!

கவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணி முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், “உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்” என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களை உற்று கவனித்த உத்தவருக்கு, சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராகவே இருந்தன. அவற்றுக்கான காரணங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார். “பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன்” என்றார் உத்தவர்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: “கண்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக கடைசி வரை நம்பினார்கள். நடப்பவை மட்டுமல்ல; நடக்கப்போவதையும் முன்கூட்டியே நன்கறிந்த நீ, முன்னதாகவே சென்று, ‘தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்... விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு பாடம் புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான், நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். அதோடு விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்தபோதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.

‘திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, அந்தப் பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்டபோதுதான் சென்று, ‘துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று ஜம்பமாக மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, பலர் முன்னிலையில் அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன அவளிடம் இருக்கிறது? அவள் அப்போதே இறந்து விட்டாள். எதனைக் காத்ததாக எண்ணி நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? ஆபத்தான இதுபோன்ற சமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத, நீ எப்படி ஆபத்பாந்தவன்? நீ செய்தது நியாயமா! தருமமா?” என்று கேட்டார் உத்தவர்.

பகவான் சிரித்தார். “உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான். துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. ‘பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, ‘நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்’ என்று சொல்லியிருக்கலாமே. சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மறந்து விட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால் அவன். ‘ஐயோ! விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! இந்த விஷயம் கண்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது! அவன் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே என்னை வேண்டுதலால் கட்டிப்போட்டு விட்டான்.

யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல - சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன், திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வீண் வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவேயில்லை! துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், ‘ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இதில் என் மீது என்ன தவறு?” என்று பதிலளித்தான் கண்ணன்.

“அருமையான விளக்கம் கண்ணா! ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?” என்றார் உத்தவர்.

“கேள்” என்றான் கண்ணன்.

“அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீதியை நிலைநாட்ட, ஆபத்து, கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு வரமாட்டாயா?”

புன்னகைத்தான் கண்ணன். “உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும், ‘சாட்சி பூதம்’ மட்டுமே. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்” என்றான்.

“அப்படியானால், நீ அருகில் நின்று நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து, பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?” என்றார் உத்தவர்.

“உத்தவரே! நான் சொன்னதன் உட்பொருளை நீங்கள் நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மனப்பூர்வமாக உணரும்போது மட்டும்தான் உங்களால் தவறுகளையோ, தீவினை செயல்களையோ செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், நான் உங்களுள் இருப்பதை மறைத்து எதையாவது செய்து விடலாம் என்று எண்ணி, நீங்களாகவே முடிவெடுத்துச் செய்கிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் தவறாக நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும்.”  என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். எத்தனை உள்ளர்த்தம் வாய்ந்த ஆழமான தத்துவம்! பகவானை பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைப்பதும் ஓர் உணர்வுதானே! ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை நமக்குள் வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படி செயலாற்ற முடியும்? இந்தத் தத்துவத்தைத்தான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். இதன் மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது, ‘என்னை சரணாகதி அடைபவனுக்கு எந்தத் துன்பமும் இல்லை’ என்பதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com