மின்சார வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டைவிட ஒப்பிடும் போது 2 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் எகிறி வருவதால் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதில் மக்களிடையே அதிக நாட்டம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானோர் மின்சார வாகனங்களை வாங்கியுள்ளதாக தெரிகிறது.
மின்சார வாகனங்களின் விற்பனை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய தொழிற்துறை இணை அமைச்சர் கிருஷ்ணன் பால் பதிலளித்துள்ளார். அதில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 40 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு ஆண்டில் மொத்தம் 33 ஆயிரத்து 205 மின்சார வாகனங்கள் விற்பனையானதாகவும், அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 7 மாதங்களிலேயே கடந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.2022-ஆம் ஆண்டு மொத்த கார் விற்பனையில், மின்சார கார்களின் பங்கு ஒரு சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மின்சார கார்களின் விற்பனை 2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அளித்துவரும் நிதி உதவிகளால் உள்நாட்டில் உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் தெரிவித்துள்ளார்.