கேரளாவைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர் IRCTC இணையதளத்தில் தனது ரயில் டிக்கெட்டை ரத்துசெய்ய முயற்சித்தபோது மோசடி வலையில் சிக்கி 4 லட்சத்தை இழுந்துள்ளார்.
இணையத்தில் ரயில் டிக்கெட் புக் செய்யும் நபர்கள் இந்த மோசடி குறித்து அறிந்துகொள்வது நல்லது. கேரளாவைச் சேர்ந்த பஷீர் என்ற 78 வயது முதியவர், தனது ரயில் டிக்கெட் ரத்து செய்ய முயன்றபோது பார்ப்பதற்கு IRCTC இணையதளம் போலவே இருக்கும் போலி இணையதளத்திற்குச் சென்றுள்ளார். அந்த இணையதளத்தில் தனது டிக்கெட்டை கேன்சல் செய்ய முயன்றபோது தன்னை ரயில்வே ஊழியர் என்று கூறி ஒருவர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
அந்த நபர் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சிறப்பாக பேசி பஷீருக்கு எப்படி ரயில்வே டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவர் கூறிய வழிமுறைகளை பஷீர் பின் பற்றிய பிறகு அவருடைய மொபைல் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்துள்ளது. அதை கிளிக் செய்ததுமே அந்த முதியவரின் கணினி டிஸ்ப்ளேவில் நீல நிறத்தில் ஏதோ தோன்றி இருக்கிறது. அதன் பின்னர் பஷீரின் சாதனம் முழுவதுமாக மோசடி செய்பவரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி பஷீர் தனது வங்கிக்கணக்கு விவரங்களையும், ஏடிஎம் கார்டு எண்ணையும் பகிர்ந்துள்ளார். நீல நிறத்தில் பஷீரின் சாதனத்தில் வந்த சின்னம் என்பது ஏதாவது மால்வேரின் வேலையாக இருக்கலாம். இப்படிதான் பாதிக்கப்பட்டவர்களின் சாதனத்தைக் கட்டுப்படுத்த ஆன்லைன் ஸ்கேமர்கள் பல வகையான மால்வேர்களைப் பயன்படுத்துகின்றனர். இப்படிதான் பஷீரின் சாதனத்தை கட்டுப்படுத்த ஸ்கேமர்கள் ஏதாவது ஒரு மால்வேரைப் பயன் படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தான் மோசடி வலையில் சிக்கியுள்ளோம் என்பது தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்த பிறகுதான் பஷீருக்கு தெரிந்துள்ளது. அதன் பிறகு அவசர அவசரமாக காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பிக்சட் டெபாசிட் கணக்கிலிருந்த 4 லட்ச ரூபாயும் மொத்தமாக எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோசடிக்காரர்கள் மூன்று வெவ்வேறு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பஷிரை பலமுறை தொடர்பு கொண்டுள்ளனர்.
குறிப்பாக 'ரெஸ்ட் டெஸ்க்' என்ற செயலியை அவரது ஃபோனில் பதிவிறக்கம் செய்து பஷீரின் போனை மோசடிக்காரர்கள் அணுக அவரே அனுமதித்துள்ள விஷயம் காவல்துறையின் சைபர்செல் விசாரணையில் தெரியவந்தது.