தெலுங்கானா மாநிலத்தில் மாநில வேளாண் துறையுடன் இணைந்து உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு வேளாண் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமான ஏ ஐ பயன்பாட்டை தொடங்கியுள்ளது.
இது குறித்து உலக பொருளாதார கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தற்போதைய நவீன உலகமய சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுவிட்டது.குறிப்பாக இந்தியாவில் மருத்துவத்தில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வணிகம், கல்வி, தொலைத் தொடர்பு துறை, பாதுகாப்புத்துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தெலங்கானா மாநில வேளாண் துறையுடன் இணைந்து விவசாயத் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தை புகுத்தும் முயற்சி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக 7 ஆயிரம் மிளகாய் பயிரிடும் விவசாயிகளிடம் ஏ ஐ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது கட்ட நடவடிக்கையின் போது 20,000 மிளகாய் மற்றும் கடலை பயிரிடும் விவசாயிகளிடம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் விளைச்சல் அதிகரித்து விவசாயம் நடைபெறுவதற்கு வழி ஏற்படும். இப்படி மண்ணின் தன்மை, நீரின் தேவை, காற்றின் அளவு, மழை காண வாய்ப்பு, விளைபொருளுக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கான அளவு போன்ற விவசாயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு வழி ஏற்பட்டிருக்கிறது என்றும், மேலும் பருவநிலை மாற்றம் இந்தியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரக்கூடிய நிலையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சவால்களை சந்திப்பது முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.