விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் வாங்க போறீங்களா? இதை முதல்ல கவனியுங்க!

விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் வாங்க போறீங்களா? இதை முதல்ல கவனியுங்க!
Kalki vinayagar
Kalki vinayagar

விநாயகர் சதுர்த்திக்கு பூஜை பொருட்கள், கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் என ஷாப்பிங் லிஸ்ட் தயாரித்துக் கொண்டு கடைவீதிக்கு செல்வோம். அந்த லிஸ்ட்டில் மிக முக்கியமாக இடம் பெற்றிருப்பது விநாயகர் சிலை இல்லையா? நம்முடைய வீட்டிற்கு தகுந்தாற்போல் சிறியதாக ஒரு சிலையை வாங்கி வைத்து பூஜை செய்வோம். அப்படி பிள்ளையார்   சிலை வாங்கும்போது ஏனோ தானோவென்று வாங்கக்கூடாது.  அதற்கென சில விஷயங்கள் உண்டு. அதை பார்த்துதான் வாங்க வேண்டும். மார்க்கெட் முழுவதும் கலர் கலராக அலங்காரங்கள் செய்யப்பட்டு பிள்ளையார் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நமக்கும் அதை பார்த்ததும் உடனே வாங்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், அதில் கவனித்து பார்க்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

சிலை வாங்குதல்:

நிற்கும் பிள்ளையாரா? அமர்ந்திருக்கும் பிள்ளையாரா? எதை வாங்குவது?: பிள்ளையாரை பொறுத்தவரையில் ஏராளமான போஸ்களில் நிறைய மாடல்கள் செய்து வைத்திருப்பார்கள். நமக்கே குழம்பிவிடும் எதை வாங்குவது என்று. அதனால் குழம்பாமல் இதைக் கவனியுங்கள். வீட்டுக்கு வாங்கும் பிள்ளையார் என்றால் அமர்ந்திருக்கும் வடிவங்கள்தான் சிறந்தது. இதுவே அலுவலகம், தொழில் செய்யும் இடம் என்றால் நின்றபடி இருக்கின்ற சிலையை வாங்குங்கள். அமர்ந்திருக்கும் பிள்ளையார் என்றால் செல்வ வளம் நிலையாக வீட்டில் தங்கும் என்பது ஐதீகம். தேவையில்லாத விரைய செலவுகள் குறையும். நின்றுகொண்டிருக்கும் பிள்ளையாரை தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் தொழில் வளம் பெருகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தும்பிக்கை இருக்கும் திசை: அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் பிள்ளையாரின் தும்பிக்கைதான். பிள்ளையார் என்றாலே தும்பிக்கைதானே பிரதானம்? அதனால் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். நாம் வாங்கும் பிள்ளையாரின் தும்பிக்கை வலப்புறமாக திரும்பி இருக்கிறதா இடப்புறமாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும். மிகச்சிறிய பிள்ளையார் சிலைகளில் தும்பிக்கையானது பெரும்பாலும் நடுநிலையாகக்கூட இருக்கும். அப்படி இருப்பதை வாங்கக்கூடாது. இடது புறமாக வளைந்து இருக்கக்கூடிய தும்பிக்கை கொண்ட பிள்ளையார்தான் புனிதமானதாக கருதப்படுகிறது. அதனால் இடது புறம் தும்பிக்கை திரும்பிய பிள்ளையாரைப் பார்த்து வாங்குங்கள்.

கொழுக்கட்டை ஏந்திய எலி: பிள்ளையாரின் வாகனம் எலி என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பிள்ளையார் சிலை வாங்கும்போது இந்த எலியை வாங்க மறந்து விடுகிறோம். அப்படி எலியையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால், எலி கொழுக்கட்டையை கையில் வைத்திருக்கும்படி வாங்குங்கள்.

எதில் செய்யப்பட்டது: பிள்ளையார் நல்ல களிமண்ணால் செய்தது என்றால் மிகச்சிறப்பு. இப்போது நிறைய மெட்டீரியல்களில் செய்யப்படுகின்றன. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், கெமிக்கல்கள் கலந்ததாக இல்லாமல் இருக்க வேண்டும். அதனால்தான் களிமண் பிள்ளையார் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மரக்கட்டையால் செய்யப்பட்ட எந்த பிள்ளையாரையும் பூஜையில் எப்போதும் வைக்கக்கூடாது. ஏன் நம் வீட்டு பூஜை அறையிலேயே அதை வைத்திருக்கக்கூடாது!

 பிள்ளையார் நிறம்: பிள்ளையாரைப் பொறுத்தவரை ஏராளமான மின்னும் வண்ணங்களில் தயார் செய்யப்பட்டு மார்க்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. ஆனால், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ அல்லது மண்ணின் இயல்பான கருப்பு நிறத்திலோ இருக்கும் பிள்ளையாரை வாங்குங்கள். அது உங்கள் வீட்டுக்கு மிகுந்த அமைதியையும் நேர்மறை சக்தியையும் ஆற்றலையும் கொடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com