
செடி வளர்ப்பது நமக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நேரம் இல்லை. இடமும் இல்லை என்று பறந்து கொண்டிருக்கிறோம். இந்தக் குறையைப் போக்குவதுதான் டெரேரியம்.
இதைப் பற்றி மங்கையர் மலர் ஏப்ரல் 2018 இதழில் ப்ராங்க்ளின் என்பவர் அளித்த பேட்டியிலிருந்து சில துளிகள்...
முதலில் டெரேரியம் என்றால் என்ன?
“டெரேரியம் என்பது கண்ணாடிக் குடுவையில் செடி வளர்க்கும் கலை.”
இதன் செயல்முறை பற்றிச் சிறிது விளக்கமாகக் கூற முடியுமா?
“தாராளமாக. முதலில் நமக்குத் தேவையான கண்ணாடிக் குடுவையை எடுத்து அதில் கொஞ்சம் கூழாங்கற்களைப் போட வேண்டும். பின், சிறிது சார்கோல் (கரித் துண்டுகள்). அவை எதற்கென்றால் அதிகமாக இருக்கும் நீரை ஈர்த்துக்கொள்ள. அதற்கு அடுத்து தேங்காய் நார். இது செடியை வாட விடாமல் இருக்க. பின் நமக்குத் தேவையான செடியை அதில் வைக்க வேண்டும்.”
எந்த வகையான செடிகளை அதில் வளர்க்கலாம்?
“சிறிய இண்டோர் பிளான்ட்ஸ் மற்றும் கேக்டஸ் எனப்படும் கற்றாழை.”
இதற்குத் தண்ணீர் எப்படி ஊற்ற வேண்டும்?
“தண்ணீரை ஸ்ப்ரேதான் செய்ய வேண்டும்.”
வெளிச்சம் தேவையா?
“ஆமாம். வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் வைக்கலாம்.”
கண்ணாடிக் குடுவையில் செடிகளோடு பொம்மைகளும் இருக்கின்றனவே?
“ஆம். நம்முடைய கிரியேட்டிவிட்டிதான் இதற்கு மிக முக்கியம். இதில் பொம்மைகள், மினியேச்சர் பொருட்கள் ஆகியவற்றையும் வைக்கலாம்.”
இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமா? இல்லை லாபமும் இருக்கிறதா?
“கண்டிப்பாக லாபம் உண்டு. இதை அன்பளிப்பிற்காக நிறையப் பேர் வாங்கிச் செல்கிறார்கள். பிறந்த நாள், திருமண நாள், திருமணம்... போன்று எல்லாவிதமான விசேஷங்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள்.”
வாசகர்களே!
நீங்களும் இதுபோன்று குடுவைகளில் செடி வளர்க்கிறீர்களா? உங்களுடைய அனுபவங்களை தகுந்த புகைப்படங்களுடன் இணைத்து mangayarmalar@kalkiweekly.com க்கு அனுப்பலாமே!