-லக்ஷ்மி ஜெயராமன்
இந்தியர்களின் வாழ்க்கை முறையே மிக உன்னதமான ஒன்று. பண்டிகைகள் வெறும் பொழுதுபோக்குக்காகவும், உற்சாகத்துக்காகவும் மட்டும் கொண்டாடப்
படுவதில்லை. ஒவ்வொன்றின் பின்னணியிலும் நற்கருத்துக்கள் இருக்கும். இந்தியனின் வாழ்க்கை முறையில் மதமும், சமுதாயமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. அவற்றை வேறுபடுத்த முடியாது.
நம் நாட்டில் ஜனத்தொகைப் பெருக்கம், பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி முறையில் கேடு என்ற வருந்தத்தக்க விஷயங்கள் நிலவுகின்றன. அதனால் அரசியல்வாதிகளும், அறிவாளிகளும் 'சமூக சேவை சமுதாய விழிப்புணர்ச்சி' என்ற பெரிய வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி விடுகின்றனர்.
சமூக சேவையும், சமுதாய நலமும் நமது வாழ்க்கை முறையோடு ஒட்டியே வருகின்றன. தினசரி வாழ்க்கையிலேயே கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை கவனிக்கத் தவறி விடுகிறோம். கோயில்களிலும், மடங்களிலும் பிரசாதம் வழங்குவதும், விசேஷ நாட்களில் சாப்பாடு போடுவதும்கூட சமூகப் பணிதான். நம் முன்னோர்கள் சமூக சேவையை எளிதாக நடைமுறையிலேயே கொடுத்தனர். இதற்கு நல்ல உதாரணம் நவராத்திரி பண்டிகை.
நவராத்திரியின்போது பத்து நாட்களும் ஒவ்வொரு வீடும் ஒரு சமூகநலக் கூடமாகி விடுகிறது! ஒவ்வொரு குடும்பத்தினரும் மிகவும் இயல்பாக சமூகசேவகர்களாக மாறி விடுகிறார்கள்! மூன்று தேவியர்களையும் வழிபடும்போது சுமங்கலிப் பெண்களையும், சின்னஞ்சிறு கன்னிப் பெண்களையும் தேவியின் ரூபமாக பாவித்து உபசாரம் செய்கிறார்கள். அவரவர் தங்களது சக்திக்கேற்ப இவர்களுக்குத் துணிமணிகள் கொடுத்து விருந்தும் செய்து வைப்பர். சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்கள் ஏழைப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்தப் பத்து நாட்களும் நிறையவே தர்மம் செய்கின்றனர். சிறிது சிந்தித்துப் பார்த்தால் இந்தக் காரியம் ஒவ்வொரு தனி மனிதனும் செய்யும் சமூக சேவைதான் என்பது புரியும்.
கோயில்களிலும், இதே வழக்கம் நடைமுறையில் உள்ளது. சண்டி ஹோமம்' 'லலிதா ஹோமம்' முதலியன செய்து, சுமங்கலிகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் புடைவைகளும், பாவாடைத் துணிகளும் தானமாக வழங்குவர். அம்பாளுக்கு
அலங்காரம் செய்து, கண் குளிரக் கண்டு, பிரார்த்தனை செய்து மனத்தூய்மை அடைகிறோம். ஏழை மக்களுக்குப் பொருளுதவி செய்து மனத்திருப்தி அடைகிறோம்.
கொலு பொம்மைகளை அழகுணர்ச்சியுடன் அடுக்கி, நமது வாழ்க்கை முறை. கலாசாரம், மதம், இவற்றைக் குழந்தைகளுக்கு மனத்தில் பதிய வைக்க முடிகிறது. இப்பொழுதெல்லாம் நமது பரந்த மனப்பான்மைக்கு இது ஒரு சான்று. நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு இந்த மாற்றங்கள் அவசியமானவை என்று ஏற்றுக்கொண்டு, கொலுவின் மூலம் இளந்தலை முறைக்கு இவற்றைப் போதிக்கிறோம்.
தொண்டு, சேவை என்பவற்றை எல்லாம் நம் வாழ்க்கை முறையிலேயே நம் ரத்தத்தில் ஊறச் செய்துள்ளார்கள் நம் முன்னோர்கள். நமது கொண்டாட்டங்கள் எல்லாம் தெய்வத்துடன் பெரியோரையும், எளியோரையும் இணைத்து, அவர்களை வணங்கவும், மதிக்கவும் கற்றுத் தந்துள்ளன. இந்த வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதே நாம் செய்யும் மற்றோர் சேவையாகும்.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் அக்டோபர் 1998 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்