
காலை எழுந்ததிலிருந்து மேதாவுக்கு ஒரே தலைவலி. மகள் சோர்வாக இருப்பதைப் பார்த்த கல்பனா
“டல்லா இருக்கியே, என்னாச்சு?”
“ஒண்ணுமில்லைமா தலைய வலிக்குது மாத்திரை ஏதாவது கொடு”
“சொன்னா கேட்டாத்தானே” அர்ச்சனையை ஆரம்பித்து விட்டாள் கல்பனா.
“எப்போதும் செல் போன்ல ஏதோ நோண்டிட்டு இருக்கே. கேட்டா நோட்ஸ் பார்க்கிறேன்கிறே. கண் கெட்டு தானே போகும். அதான் தலைவலி வந்திருச்சு. இந்த வயசிலேயே கண்ணாடி போட்டா நல்லாவா இருக்கும். நாங்கள்ளாம்...........”
“மம்மி ஸ்டாப். ஏம்மா ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டு பேசற. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. சாதாரண தலைவலி தான் நீ குடுக்கிற கேரட், கீரைனு முயல் மாதிரி முசு முசுன்னு தின்றேன். அப்போ நீ சொல்ற மாதிரி கண் நல்லாத்தானே இருக்கும். பெரிசு பண்ணாதே”
“அதெல்லாம் தெரியாது. நீ இன்னிக்கு காலேஜ் போக வேண்டாம். கண் டாக்டர்கிட்ட போலாம்”
கிளினிக்கில் மேதாவைப் பரிசோதித்த டாக்டர் “எல்லாம் நார்மல். உன் EYE SIGHT PERFECT ஆ இருக்கு. ஸ்டிரெய்ன்னால தலைவலி வந்திருக்கலாம்” என வலி நிவாரண மருந்தைப் பரிந்துரைத்தார். மேதா அருகில் அமர்ந்திருந்த கல்பனாவை முறைக்க அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.