இதற்கு ஒரே வார்த்தையில் பதில் கூறலாம். வாழ்க்கை தர பணவீக்கம் (Lifestyle inflation)தான் காரணம்...
வாழ்க்கை தர பணவீக்கம் என்றால் என்ன?
வாழ்க்கை தர பணவீக்கம் என்றால், ஒருவரின் சம்பளம் அல்லது பணத்தின் வரவு அதிகரிக்கும்போது அதற்கேற்றவாறு தனது வாழ்க்கைத் தரம் சார்ந்த செலவுகளும் அதிகரிப்பது அல்லது அதிகரித்துக் கொள்வது! இதன் காரணமாக எவ்வளவு பணம் சம்பாதித்தாலும்கூட அந்தப் பணம் போதாது என்ற நிலை ஏற்படுகிறது. பணம் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற ஒரு தவிப்பு ஏற்படுகிறது.
உதாரணமாக ராமு என்ற ஒரு நபரை எடுத்துக் கொள்வோம்.
ராமுவின் மாதச் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். ஒரு வருடத்தில் சம்பாதிக்கும் பணம் மூன்று லட்சம் ரூபாய். அவர் ஒரு டிவிஎஸ் 50 வைத்துள்ளார். அவர் தினமும் வீட்டில் இருந்தே உணவு எடுத்துக்கொண்டு செல்கிறார். ஒரு படுக்கையறை வீட்டில் புறநகர் பகுதியில் குடியிருக்கிறார். அரிதாகவே புதிய உடை வாங்குகிறார். பணத்தைப் பார்த்து பார்த்துச் செலவு செய்கிறார்.
அவரது மாத செலவுகள்:
வீட்டு வாடகை — 1 படுக்கை அறை வீடு— 7000
· வெளியே உண்ணும் உணவு — 1000
· வாகன செலவு — 2000
· திரைப்படம், இதர பொழுதுபோக்குகள் — 1000
· வீட்டில் உண்ணும் உணவு — 2000
· உடை, உடல் பராமரிப்பு — 1000
· மின்சாரம், நீர், இதர பயன்பாடுகள்— 2000
சேமிக்கப்பட்ட பணம் — ரூபாய். 9000
இப்போது, ராமுவுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. அவரது சம்பளம் இரு மடங்காக உயர்கிறது (50,000 ரூபாய்). உடனே ராமு அதிகமாகப் பணம் கிடைக்கிறது என்று தனது வாழ்க்கை தரத்தை மாற்றிக்கொள்கிறார். ராயல் என்பீல்டு மோட்டார் வாகனம் வாங்குகிறார். அதில் ஒரு லட்ச ரூபாய் கடனில் மாட்டிக்கொள்கிறார். நகரத்திலேயே ஒரு இரு படுக்கையறை வீட்டிற்குக் குடி புகுகிறார். புதிதாகப் பணக்கார நண்பர்களுடன் பழகுகிறார். அவர்களுடன் அதிகமாக விருந்துகளில் கலந்துகொள்கிறார்.
பதவி உயர்வுக்கு பின்பு, ராமுவின் மாத செலவுகள்:
வீட்டு வாடகை — 2 படுக்கை அறை வீடு— 15000
· வெளியே உண்ணும் உணவு — 8000
· வாகன செலவு, கடன் தவணை உட்பட — 8000
· திரைப்படம், இதர பொழுதுபோக்குகள் — 5000
· வீட்டில் உண்ணும் உணவு — 2000
· உடை, உடல் பராமரிப்பு — 3000
· மின்சாரம், நீர், இதர பயன்பாடுகள்— 3000
சேமிக்கப்பட்டப் பணம் — ரூபாய். 6000
எனவே, அதிகமாக சம்பாதிப்பதால், அதிகமாகச் சேமிக்க முடியும் என்பது கிடையாது. அவரவர் தங்களது வாழ்க்கைத் தரத்தை எப்படி வைத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொருத்துதான் அது அமையும்.
அதிகமாக பணம் சம்பாதித்தால், பணம் செலவாகாமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?
அதிகமான தொகையைச் சேமித்து அதிகமாக முதலீடு செய்து எதிர்காலத்தில் நிதி சுதந்திரத்தை நோக்கிய குறிக்கோளை அடையப் பார்க்க வேண்டும்.
· எந்த ஒரு கடனையும் சீக்கிரமாக அடைத்துவிட பார்க்க வேண்டும். வட்டி மூலம் பணம் வீணாவதைத் தவிர்க்க வேண்டும்.
· அதிகமாக பணம் சம்பாதித்தாலும் கூட பழைய வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அதிகமாக பணத்தைச் சேமிக்க முடியும், முதலீடு செய்ய முடியும்.
· சேமிப்பிற்கு பின்தான் செலவு என்ற ஒரு விதிமுறை என்றும் பின்பற்ற வேண்டும்.
· வரவு செலவு கணக்கு வைத்திருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைக் கண்டறிந்து, அவற்றை விலக்க அல்லது குறைக்கப் பார்க்க வேண்டும்.
· திட்டமிட்டு (Budget) செலவு செய்ய வேண்டும். நிதி திட்டமிடலைத் தாண்டி பணம் செலவாகாமல் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டும்.
· வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேமிக்கப் பார்க்க வேண்டும். மாதம் 75% என்று சேமிப்பவர்கள் கூட இருக்கிறார்கள்.
எனவே, அதிகமாக பணம் சம்பாதிக்கும் போது நமது செலவை அதிகரித்துகொள்ளாமல், வாழ்க்கைத் தரத்தை பணவீக்கத்திற்கு உள்ளாக்காமல், சிக்கனமாக வாழ்ந்து அதிகமாக முதலீடு செய்து பணத்தைப் பெருக்குவோம்.