தென்றலை எதிர்பார்த்திருக்கும் பனை விசிறி தம்பதியினர்!

தென்றலை எதிர்பார்த்திருக்கும் பனை விசிறி தம்பதியினர்!

ழைக்காலம் முடிந்து பனிக்காலமும் முடியப் போகிறது. இனி தொடங்க இருப்பது கோடைக் காலம். கோடைக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியது விசிறி மட்டை. இது கிராமப்புறங்களில் பெரும்பாலும் செய்யப்பட்டு நகர்ப்புறங்களில் விற்பனை செய்யப் படுகிறது.

பனை ஓலையில் விசிறி செய்வது என்பது ஒரு தனிக் கலை. அதை தன் 83 வயதிலும் அசராமல் செய்து வருகிறார் பழூர் கிராமத்தைச் சேர்ந்த குஞ்சிதபாதம்.

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தா. பழூர் கிராமத்தில் உள்ள தோப்பு தெருவில் வசித்து வருபவர் குஞ்சிதபாதம். 83 வயது முதியவர். இவருடைய மனைவி 77 வயதான வசந்தா. 45 ஆண்டுகளுக்கு முன் திருமணம். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

ஆரம்பத்தில் கூலி வேலைக்குச் சென்ற குஞ்சிதபாதம்,  நாளடைவில் தாமே ஏதாவது கைத்தொழில் கற்றுக் கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தார். அப்போது உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்றபோது பனை ஓலையில் விசிறி தயாரிப்பதைக் கண்டார். அங்கு சில நாட்கள் தங்கிப் பயிற்சி எடுத்துக் கொண்டு, பின்னர் தனது சொந்த ஊருக்கு வந்து தாமே பனை ஓலையில் விசிறி மட்டை தயாரிப்பதைத் தொழிலாக மேற்கொண்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் துளிகூட ஆர்வம் குறையாமல் இன்றுவரை செய்து வருகிறார்.

இத்தொழிலில் பெரிதாக வருமானம் இல்லை என்றாலும், யாரிடமும் கையேந்தாமல் ஏதோ அன்றாட சாப்பாட்டிற்காவது இந்தத் தொழில் கைகொடுக்க உதவுகிறது என்கிறார் குஞ்சிதபாதம். அவருக்கு உறுதுணையாக மனைவி வசந்தா, வீட்டு வேலைகளைச் செய்வதோடு மட்டுமின்றி விசிறி செய்வதற்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்து, கணவன் உழைப்பில் தாமும் பங்கெடுத்துக்கொள்கிறார்.

விசிறி தயாரிப்பதற்காக முதியவரான குஞ்சிதபாதம் தனது வீட்டிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் ஓட்டிச் சென்று, பனை மட்டைகளை எடுத்துக்கொண்டு,  சாலையைக் கடந்து வீட்டுக்கு வருவதற்குள் போதுமென்றாகி விடுமாம். அதன்பிறகு வீட்டில் மட்டைகளைச் சேகரித்து, அவற்றைக் காய வைத்து, ஒவ்வொரு மட்டையாக வெட்டி, பிறகு விசிறி தயாராகும்.

தயார் செய்யப்பட்ட விசிறிகளை எடுத்துக்கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் உள்ள கும்பகோணம்,  ஜயங்கொண்டம் ஆகிய நகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்குச் சைக்கிளில் சென்று, மொத்தமாக விற்பனை செய்துவருகிறார். அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்றும் ஒரு பனை விசிறி ரூபாய் 25/-க்கு விற்பனை செய்கிறார்.

இவர்களைக் கவனிக்கக் குழந்தைகள் இல்லாத தாலும், தோள் கொடுக்க உறவினர்கள் யாரும் முன்வராததாலும், யாருடைய ஆதரவுமின்றித் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்த வீடும் இல்லை.

மாதம் 300 ரூபாய் வாடகை கொடுத்து தற்போது கூரை வீட்டில்தான் வசித்து வருகின்றனர் என்பதுதான் பரிதாபம். முதியோர் உதவித்தொகை கேட்டு இருவரும் அரசுக்கு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து,  தமிழக அரசின் சார்பில் முதியோர் உதவித்தொகை குஞ்சிதபாதத்துக்கு மட்டும்  ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மனைவிக்கு வழங்கப்படவில்லை.

முதியவருக்கு வழங்கப்படும் அந்தப் பணம் வீட்டு வாடகைக்கும், அன்றாட செலவுக்கும் சரியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

நாங்கள் இன்னும் கொஞ்சம் காலம்தான் வாழப் போகிறோம். எனவே, என் மனைவிக்கும் தமிழக அரசு உதவித்தொகை வழங்கினால் பேருதவியாக இருக்கும் என்கிறார் முதியவர் குஞ்சிதபாதம்.

அதே நேரத்தில் முகத்தில் வறுமை தெரிந்தாலும்,  உள்ளத்தில் கவலை இருந்தாலும், எதையும் காட்டிக்கொள்ளாமல் தள்ளாடும், வயதிலும், தன் உயிர் மூச்சு நிற்கும் வரை உழைப்பையே மூலதனமாகக் கொண்டு, ஒரு இளைஞனைப் போன்று கம்பீரமாக நடை போடுகிறார் 83 வயது குஞ்சிதபாதம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com