கனவென்ன கண்டோமென
எழாமல்
உணவென்ன செய்யவென
எழுவதிலே
சுணக்கம் வந்து
அதிகாலை அழுது வடிகிறது.
வட்டமாய் மெல்லிசாய்
முறுகலாய்
நாள்தோறும் சுடப்படும்
தோசையின்
விட்டத்தில் கால்கடுக்க
முகவாட்டம் நிற்கிறது.
சிறுகுன்று உயரத்திற்கு
கழுவி
கவிழ்த்திய பாத்திரங்களின்
பளபளப்பில்
விழுகின்ற பிம்பத்தினை
சோர்வு ஆட்கொள்கிறது.
குறைகள் சொல்லிவிட
முடியாதபடி
பெருக்கி துடைக்கப்பட்ட
தரையின்
நிறைவுகளில் சிந்தனைகள்
சிறை பிடிப்பை உணர்கிறது.
துவைத்து இஸ்திரி
செய்து
மடித்து வைக்கப்பட்ட
துணிகளின்
நேர்த்திகளுக்குள் ஒருவித
விரக்தி ஒளிந்திருக்கிறது!
இதுவே இல்லத்தரசியின்
பொறுப்பென்று
ஆறுதல் கொண்டாலும்
அடிமனதின்
மறுப்பு பதியப்படாமலே
அந்த நாள் முடிகிறது!
கூடவே நாளையும்
இதுபோன்ற இன்னொரு
நாளே என்பதில்
வீடு சலிப்புத்தட்டுகிறது!!