குழவிப் பருவத்தில் எங்களை,
தூக்கியதில்லையே தாங்கள்
எங்கள் இளமேனி வலிக்குமே என!
பின்னலிட்டு ரிப்பன் வைத்து
பள்ளி செல்லும் போது
பாசமுடன் சொல்லும் டாட்டா
ஞாபகம் வருகிறதே!
அலுவலகப் பிரிவுபசார விருந்துகளில்
ஒவ்வொரு முறையும்
தாங்கள் உண்ணாது
எங்களுக்காகக் கொணர்ந்த
ஒரு லட்டு, ஒரு ஜாங்கிரியை
பங்கிட்டுத் தந்த பாசவுணர்வு
ஞாபகம் வருகிறதே!
இல்ல வாசலில் பஸ் ஸ்டாப்
ஆனால் சிக்கனம் நினைத்து,
நடந்தே அலுவலகம் சென்றது
ஞாபகம் வருகிறதே!
புது மணப்பெண்ணாக
என்னைக் கணவருடன்
பிரியா விடை தருகையில்
சிரித்தவாறு தாங்கள் அழுதது
ஞாபகம் வருகிறதே!
விதிவசமாய் நோய் தாக்க
தீவிர சிகிச்சைப் பிரிவில்
இருக்கையில்
இறுதி நிலையிலும்
புன்னகை செய்த முகம்...
ஞாபகம் வருகிறதே!
எங்கள் பேரிழப்பாய் அப்பா
தாங்கள் இறந்தபோது
வெளியூரிலிருந்த நான் வர இயலாது
வாய்க்கரிசி போட வழியின்றி
நான் துடிதுடித்த தருணங்கள்
ஞாபகம் வருகிறதே!
அப்பா,
அன்பான ஞாபகங்களின்
திரட்டு நீங்கள்!
எண்ணி எண்ணி
அதனை அசைபோடும்
துர்ப்பாக்யக் கன்றுகள் நாங்கள்!