செப்டம்பர் 29… உலக இதய தினம். இந்த நாளை நாம் கண்டிப்பாக நினைவு கூர்ந்தாக வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது. ஆம்... உலக அளவில் இதய நோய்கள் அதிகமாக தாண்டவம் ஆடுவது நம் இந்தியாவில்தான்.
உணவுப் பழக்கத்தில் உஷாராக இருந்தால் இதய நோயைத் தவிர்க்கலாம். 30 வயதிற்கு மேல் நம் உணவுப் பழக்கத்தில் சில 'Do'ஸ்... அண்ட் 'Don’tஸ்களை பழகிக்கொள்வது அவசியம்.
முதலில்' Do'ஸ்:
காலை உணவாக ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்றவற்றை எடுத்துக்கொள்வது நலம். பிரெட், நூடுல்ஸ் போன்றவற்றை காலையில் சாப்பிடுவதை தவிர்த்தல் நலம். காரணம் ரத்தத்தில் கொழுப்பின் அளவை இவை அதிகப்படுத்தும்.
மதிய உணவாக கேரட், பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளையும், கீரைகளையும் அதிகளவு எடுத்துக்கொள்ளலாம்.
இரவு உணவாக இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு கோதுமை தோசை சாப்பிடுவது நலம்.
மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய பழக்கம்... உணவு உண்டதும் உடனடியாக படுக்கைக்கு செல்லக்கூடாது.
புரதச்சத்து நிறைந்த பயறு வகைகளை நிறைய எடுத்துக்கொள்வது நலம்.
உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்வது மிக மிக அவசியம்.
வறுவல் ஐட்டங்களை தவிர்த்து வேகவைத்த மற்றும் குழம்பில் போடப்பட்ட காய்கறிகள் எடுத்துக்கொள்வது நலம்.
இப்ப 'Don't'ஸ்:
கிழங்கு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது சரியல்ல.
ஹோட்டல்கள், ஃ பாஸ்ட் ஃபுட் கடைகள்.. இங்கெல்லாம் என்ன மாதிரியான எண்ணெயில் சமைக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியிருக்க...
அங்கு விற்கப்படும் எண்ணெய் வழியும் பரோட்டா, சில்லி பரோட்டா, இறைச்சி, கொழுப்பு உணவுகளை வாங்கி உண்பது ஆபத்தானது.
பீட்சா, பர்கர், ஸ்பிரிங் ரோல், சிப்ஸ், சாட் உணவுகள் சாப்பிடுவதை வெகுவாகக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
இதயத்தை பலப்படுத்தும் (கொழுப்பு குறைத்த உணவு வகைகள்) சில ரெஸிபிகள்:
தக்காளி சூப்:
நறுக்கிய 1 வெங்காயம், 2 தக்காளியுடன், பிரியாணி இலை மற்றும் சிறிது மிளகு சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு 10 நிமிடம் சிம்மில் வைக்கவும். பிறகு சோள மாவை சிறிது நீரில் கரைத்து, கொதிக்கும் சூப்பில் கலந்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பின் மிக்சியில் அடித்து வடிகட்டி சுடச்சுட பரிமாறவும்.
பருப்புத் துவையல்:
கடலைப் பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு கால் கப், கொழுப்பு நீக்கிய பாலில் உறை ஊற்றப்பட்ட தயிர் அரை கப் மிளகாய் ஒன்று. பருப்பு வகைகளை தனித்தனியாக வறுத்து தயிர் + பருப்பு + மிளகாய் ஆகியவற்றை கலந்து மைபோலரைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இனிப்பு கீர்:
பாசுமதி அரிசியை சுத்தம் செய்து, இரண்டு மணி நேரம் ஊற விட்டு, கொழுப்பு நீக்கப்பட்ட பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரிசியை நொய் பதத்திற்கு அரைத்தெடுத்து, அதனுடன் மீதமுள்ள பாலையும் சேர்த்து அடுப்பில் வைத்து கூழ் போல் நன்கு வேகவிடவும். சர்க்கரையைப் போட்டு கரையும் வரை கலக்கவும் அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய்த் தூளைப் போட்டு சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றோ பரிமாறலாம்.
நம் உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்...
உணவில் கவனமாக இருப்போம்; இதயம் காப்போம்.