நரி முகத்தில் விழித்தால் நல்லது: பிரபல வங்காநரி ஜல்லிகட்டு!

நரி முகத்தில் விழித்தால் நல்லது: பிரபல வங்காநரி ஜல்லிகட்டு!

-பிரமோதா.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பல கிராமங்களில் வருடாவருடம் காணும் பொங்கலன்று வங்கா நரி ஜல்லிகட்டு நடப்பது வழக்கம். அதேபோல இந்த வருடமும் கொட்டவாடி ஊராட்சியில் வனத்துறை எச்சரிக்கையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

''நரி முகத்தில் கண் விழிச்சால் நல்லதுங்க. அதான் இப்படியொரு சம்பிரதாயம் எங்க ஊர் சுத்துப்பட்டு கிராமங்கள்ல நடக்குது'' என்றனர் ஊர் மக்கள்.

 சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கொட்டவாடி மற்றும் ரங்கனூர் கிராமத்தில்  சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடத்ஹப் பட்டு வருகிறது வங்காநரி ஜல்லிக்கட்டு. இப்பகுதிகளில் இந்த ஜல்லிக்கட்டு பேமஸ்.. ''காணும் பொங்கல் அன்று வங்கா நரி முகத்தில் விழித்தால். அந்த ஆண்டு நன்றாக இருக்கும்'' என்பது இப்பகுதி மக்கள் நம்பிக்கை. அதற்காக, ஒரு வாரத்திற்கு முன்னரே காட்டுப்பகுதிக்கு சென்று நரி வேட்டையாட வலையோடு காத்திருப்பார்கள். நரி பிடிபட்டதும்..ஊருக்கு கொண்டு வந்து கோயிலில் கட்டிப்போட்டு விடுவார்கள். காணும் பொங்கல் அன்று கோலாகலமாக விழா கொண்டாடி, நரிக்கு பூஜை செய்து பின்னர் மேளதாளத்துடன் அதை ஊரைச் சுற்றி ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.. எல்லோரும் நரி முகத்தை பார்த்தவுடன் மீண்டும் காட்டுக்குள் கொண்டுவிட்டு விடுவார்கள். வன விலங்கு என்பதால்.. இதற்கு வனத்துறை தடை விதிக்கும். ஆனால் கிராம மக்கள் எப்படியாவது ஒரு நரியைப் பிடித்து கொண்டு வந்து பூஜை செய்து, ஊர் முழுக்க ஊர்வலம் கொண்டு சென்றபின், மீண்டும் அதை காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். வனத்துறையும், இதை கண்டும் காணாமல் இருந்து விட்டு பெயருக்கு இரண்டு பேர் மீது வழக்கு போட்டு விட்டு விடுவார்கள்

''முன்பெல்லாம்.. கோயிலைச் சுற்றி நரியை ஒட விடுவார்கள்.. இதனால் ஜல்லிக்கட்டு என்று அழைத்து வந்தார்கள்.. இப்போது கட்டுப்பாடு காரணமாக கூண்டில் வைத்து சுற்றி வருகின்றனர்.'' என்றார் ஊர் பெரிசு ஒருவர்.

 இதேபோல் குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கனூர் கிராமத்திலும் கோயில் வளாகத்தில் வங்காநரி பிடித்து வந்து வழிபாடு நடத்தி பின்னர் காட்டில் விட்டுள்ளனர்.அதேபோல் சின்னம் நாயக்கன் பாளையத்தில் அனுமதியின்றி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்திய இருவர் மீது வழக்கு பதிவு செய்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் வனத்துறையினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com