
இந்தியாவில் 108 அவசரகால சேவை என்பது தேவைப்படும் மக்களுக்கு அவசர காலத்தில் மருத்துவ சேவையை வழங்கும் ஒரு இலவச அவசர சேவையாகும். இந்த சேவை 24/7 கிடைக்கிறது. மேலும் எவரெருவரும் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் கோர கட்டணமில்லா எண் 108ஐ அழைக்கலாம். இந்தியாவில் மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான அவசர மருத்துவ சேவைகளில் ஒன்றாக 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. இது நாடு முழுவதும் பல மாநிலங்களில் இயங்குகிறது. இந்தியாவில் 108 ஆம்புலன்ஸ் சேவை உயிர்களைக் காப்பாற்றுவதிலும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
108 ஆம்புலன்சில் ஓட்டுநர், ஒரு ஊழியர், ஒரு துணை மருத்துவர் அல்லது ஒரு மருத்துவர் அல்லது செவிலியர் ஆகியோர் இருப்பர். மேலும் ஆம்புலன்சில் உடனடியாக அவசர சிகிச்சை அளிக்க டிஃபிபிரிலேட்டர், ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் முதலுதவி பெட்டி போன்ற தேவையான மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இதில் சுமார் 6,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவசர மருத்துவ உதவிக்காக தினமும் கட்டுப்பாட்டு அறைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மேம்பால கட்டுமான பணிகள் மற்றும் இதர சாலை பணிகள் காரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவைகள் விரைந்து செல்ல முடியாததால் சரியான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியநேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் நேரம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் 5 நிமிடத்திற்குள்ளும், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் தலா 7 நிமிடத்திற்குள்ளும், பிற மாவட்டங்களில் 8 நிமிடங்களிலும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பெற முடியும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதற்கான காத்திருப்பு நேரம் சராசரியாக 7.57 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும் அதிக விபத்துகள் நடக்கும் இடங்கள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட இடங்கள், குடிசைப் பகுதிகள் போன்றவை ஹாட் ஸ்பாட்டுகளாக கண்காணிக்கப்பட்டு, அங்கு முன்னெச்சரிக்கையாக 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.