பாகிஸ்தானில் ரம்ஜான் கால இலவச உணவு விநியோக மையத்தில் ஏற்பட்ட நெரிசலில் 16 பேர் பலி!

பாகிஸ்தானில் ரம்ஜான் கால இலவச உணவு விநியோக மையத்தில் ஏற்பட்ட நெரிசலில் 16 பேர் பலி!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பாகிஸ்தானில் இலவச உணவு விநியோகம் செய்யும் இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

கடும் விலைவாசி உயர்வு, அதீத கடன் சுமை மற்றும் டாலர் பற்றாகுறையினால் பாகிஸ்தான் தடுமாறி வருகிறது. உணவு பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் கராச்சி நகரில், ரம்ஜான் கால இலவச உணவு விநியோக மையம் ஒன்றில் வினியோகிக்கப்பட்ட உணவினை வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 16 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு (35%) அதிக பணவீக்கத்திற்கு மத்தியில் பட்டினி மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரம்ஜான் பண்டிகையின் போது இலவச உணவுக்காக ஏராளமான மக்கள் கூடுகிறார்கள்.

பெஷாவர் மையத்தில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு சவாலாக மாறியதால், கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதாகவும், துப்பாக்கியை வானத்தைப் பார்த்துச் சுட்டதாகவும் உணவுத் துறை அமைச்சர் கூறியதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் நூற்றுக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் பீதியடைந்து ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஓடியுள்ளனர். அவர்களில் சிலர் சாக்கடையில் விழுந்தனர். பலர் தங்களை காப்பாற்றிக் கொண்டு தப்பி ஓடினார்கள்.

இந்த சம்பவத்தில் பெஷாவரில் 11 பேரும், கராச்சி மற்றும் பிற இடங்களில் 5 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி உத்தரவிட்டுள்ளார்.

ஏராளமானவர்கள் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். காராச்சியில் ஒரு தொழிற்சாலை உரிமையாளர், இலவச உணவு வழங்கும் மையத்தை, காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்காமல் நடத்திய போது இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள இலவச உணவு விநியோக மையங்களில் ஏற்பட்ட நெரிசல்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது

logo
Kalki Online
kalkionline.com