

அமெரிக்க கரன்சியான டாலர் நோட்டுகளில் 165 ஆண்டுகளாக நிதி அமைச்சரின் கையெழுத்தே இடம்பெற்ற நிலையில் அந்நாட்டின் 250 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி முதன்முறையாக அதிபரின் கையெழுத்து இடம்பெற உள்ளது.
ஆங்கிலேயரிடமிருந்து 1776, ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்கா சுதந்திரம் பெற்றது. அந்நாட்டின் 250-ஆவது சுதந்திர தின விழா இந்த ஆண்டு (2026) பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை வெளியிட அமெரிக்கக் கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதில் அதிபர் ட்ரம்பின் உருவம் பொறித்த 24 கேரட் தங்க நாணயமும் ஒன்றாகும். அந்த நாணயத்தில் ட்ரம்பின் உருவத்துடன் "1776 - 2026 சுதந்திரம்" என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் 250 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டாலர் நோட்டுகளில் அதிபர் ட்ரம்பின் கையெழுத்து இடம்பெற உள்ளதாக அமெரிக்க நிதித்துறை பொருளாளர் ப்ராண்டன் பீச் நேற்று அறிவித்தார்.
இது குறித்துச் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "டாலர் நோட்டுகளில் அதிபரின் கையெழுத்து இடம்பெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்கது; இந்த முடிவை அமெரிக்க நிதித்துறை எடுத்துள்ளது. அதிபர் ட்ரம்பின் கையெழுத்துடன் நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்டின் கையெழுத்தும் இடம்பெறும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் 1861-இல் டாலர் நோட்டுகள் அறிமுகமானபோது இருந்தே, அதில் அமெரிக்க நிதி அமைச்சரின் கையெழுத்தே இடம்பெற்று வந்தது. கடந்த 165 ஆண்டுகளில் முதல்முறையாக அதிபர் ஒருவரின் கையெழுத்து டாலர் நோட்டில் இடம்பெற உள்ள அந்தப் பெருமை அதிபர் ட்ரம்புக்குக் கிடைத்துள்ளது.