

தமிழ்நாடு முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பொதுமக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படவிருக்கிறது. இந்த மாதம் முதல் 200 யூனிட் மின்சாரம் தொடர்பான விவரபட்டியலை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. உங்கள் வீட்டில் எவ்வளவு யூனிட் ஓடினால் இனி எவ்வளவு கரெண்ட் பில் வரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க...
கடந்த 2016ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த நடைமுறை மாறாமல் முக ஸ்டாலின் முதல்வராக இருந்த போதும் தொடர்ந்தது.
தற்போது தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய், முதலாவதாக 200 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டத்தில் கையெழுத்து இட்டார்.
அதில், வீடுகளில் 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, அடுத்த 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு வெளியிட்டதுடன், இந்த நடைமுறை கடந்த 10-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த காலங்களில் 210 யூனிட்டுக்கு ரூ.282 வசூலிக்கப்பட்ட நிலையில் இனிமேல் 210 யூனிட்டுக்கு 47 ரூபாய் தான் வசூலிக்கப்பட உள்ளது.
300 யூனிட்டுக்கு ரூ.705 வசூலிக்கப்பட்ட நிலையில் இனிமேல் 470 ரூபாயும், 400 யூனிட்டுக்கு ரூ.1175 வசூலிக்கப்பட்ட நிலையில் இனிமேல் 940 ரூபாயும், 500 யூனிட்டுக்கு ரூ.1805 வசூலிக்கப்பட்ட நிலையில் இனிமேல் 1570 ரூபாய் தான் வசூலிக்கப்பட உள்ளது.
இது பல நடுத்தர ஏழை எளிய குடும்பங்களின் மின்சார சுமையை கணிசமாக குறைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. மேலும் உண்மையான நுகர்வோரும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மக்களும் இத்திட்டத்தின் மூலம் இன்னும் அதிகமாகப் பயனடைவார்கள். இந்தத் திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி மானியம் வழங்கப்படும் என மாநில அரசு சுட்டிக்காட்டியுள்ளது. சுமார் 2.23 கோடி நுகர்வோர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்டுகளுக்கும் குறைவாகவே மின்சாரம் பயன்படுத்துகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ. 1,730 கோடி அளவிலான மின் கட்டண மானியச் சுமை ஏற்படும். உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பது, பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைப்பது மற்றும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியைத் தணிப்பதன் மூலம், பொதுமக்கள் மீதான சுமையைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புதிய நடைமுறை மூலம் 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சார கட்டணத்தில் எவ்வளவு மிச்சம் ஏற்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.