இனி ஹெல்மெட் போட்டிருந்தாலும் 2000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். "டேய் என்னடா சொல்ற, ஹெல்மெட் போடலனா தானே அபராதம் போடுவாங்க?" என நீங்கள் கேட்பவராக இருந்தால் இந்தப் பதிவை முழுமையாகப் படிக்கவும்.
இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகமாகவே நடக்கிறது. ஒரு சிலர் செய்யும் சிறிய தவறுகளால், பல பேர் உயிர்களை இழப்பதோடு, பல பாதிப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது. சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் நம்மை பாதுகாப்பதற்கு கொண்டுவரப்பட்ட திட்டமாகும். ஆனால் நாம் தான் அதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவற்றை மீறி செயல்படுவது மூலமாக பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
போக்குவரத்து அதிகாரிகளும், மக்கள் சாலை விதிகளை மீறாமல் இருப்பதற்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதனாலேயே எப்போதும் அவர்கள் சாலையில் நின்று பொதுமக்களை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் சாலை போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். இப்படி பல முயற்சிகளை அரசாங்கம் செயல்படுத்தி வந்தும், மக்கள் அதை மதிக்காமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறு கூட ஒருவர் வாழ்க்கையையே இழந்து விடுவதற்கு காரணமாக இருக்கலாம். எனவே வாகனத்தை இயக்குபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது நீண்ட கால விதிமுறையாக இருக்கிறது. ஆனால் அதை யாரும் சரியாகப் பின்பற்றுவதில்லை.
தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் போடப்படுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். சிலர் இந்த அபராதத் தொகையிலிருந்து தப்பிக்க ஏதோ ஒரு ஹெல்மட்டை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் தலைக்கவசம் அணிந்தாலும், அதில் உள்ள க்ளிப்பைப் போடுவதில்லை. இதை கவனித்த போக்குவரத்து காவல்துறை, இனி நீங்கள் ஹெல்மெட் போட்டிருந்தாலும் அதில் கிளப் போடவில்லை என்றால் 1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், சிலர் தரமற்ற ஹெல்மட்டைப் பயன் படுத்துவதால் விபத்து நேர்ந்தால் அத்தகைய ஹெல்மெட்டுகள் அவர்களுக்கான பாதுகாப்பைத் தருவதில்லை. எனவே இனி ISI முத்திரை இல்லாத ஹெல்மட்டை ஒருவர் அணிந்து வந்தாலும் அவருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆக, நீங்கள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அதில் கிளிப் போடாமல், ISI முத்திரை இல்லாமல் இருந்தால், மொத்தமாக உங்களிடம் 2000 ரூபாய் வசூல் செய்யப்படும். எனவே ஹெல்மெட் விஷயத்தில் இனி கொஞ்சம் கவனமாக இருங்கள். காவல்துறைக்கு பயந்து ஹெல்மெட் போடவில்லை என்றாலும், உங்கள் உயிரை காப்பதற்காக ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.