தமிழகத்தில் மாணவர் சேர்க்கை இல்லை என்ற காரணத்தைக் கூறி 207 அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசின் முடிவுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, அவற்றை மூடுவது கண்டிக்கத்தக்க செயல் என்று சாடியுள்ளார்.
அன்புமணி தனது அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதையும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது மொத்தமுள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52.75 லட்சம் மாணவர்கள் மட்டுமே பயிலும் நிலையில், 12,970 தனியார் பள்ளிகளில் அதைவிட அதிகமாக 63.42 லட்சம் மாணவர்கள் பயில்வதாக அவர் தெரிவித்துள்ளார். பல தொடக்கப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் இருப்பதும், சில பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையும் உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
அரசுப் பள்ளிகள் மூடப்படுவது ஏன்?
மாணவர் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் பற்றாக்குறை என அன்புமணி குற்றம்சாட்டினார். தொடக்கக் கல்வித் துறையில் 1.66 லட்சத்திற்கும் அதிகமான வகுப்பறைகள் இருக்க வேண்டிய நிலையில், வெறும் 65,000 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுவதாகவும், இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய சூழ்நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில் தயக்கம் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
அரசுப் பள்ளிகளை மூடுவது இதற்குத் தீர்வு அல்ல என்று அன்புமணி திட்டவட்டமாகக் கூறினார். அரசுப் பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். மாணவர்களே இல்லாத பள்ளிகளிலும் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமித்து, உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அனைத்து மக்களுக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசுப் பள்ளிகளை மூடும் இந்த நடவடிக்கை, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவான செயல் என்றும், திமுக அரசுக்கு மக்கள் மூடுவிழா நடத்துவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மூடப்பட்ட 207 பள்ளிகளையும் மீண்டும் திறந்து, கூடுதல் ஆசிரியர்களை நியமித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அவர் அரசை வலியுறுத்தினார்.