21,000 படங்களை திருடிய டிஜிட்டல் கொள்ளையன்...iBomma மாஸ்டர்மைண்ட் கைது..!!

டிஜிட்டல் பைரசி மற்றும் ₹20 கோடி மோசடியில் சந்தேக நபர் கைது
21,000 படத் திருட்டு மற்றும் ₹20 கோடி மோசடியில் ரவி கைது
Published on

இந்தியத் திரையுலகையே மிரள வைத்த, காப்புரிமைத் திருட்டுக்  கும்பலின்  மர்மப் புள்ளியாகத் திகழ்ந்த 'iBomma' இணையதளத்தின் சூத்திரதாரி எமாண்டி ரவியை நகரக் காவல்துறை வளைத்துப் பிடித்தபோது, பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

திரைப்பட பைரசி மையத்தில் போலீசார் சந்தேக நபரை கைது செய்கிறார்
சித்தரிப்பு : பைரசி கும்பல் சரிந்தது: திருட்டுப் பட மாஸ்டர்மைண்ட் கைது

இவன் ஒரு சாமான்யன் அல்ல, பல சர்வதேச நாடுகளுடன் தொடர்புகளைப் பேணிய, ஒரு டிஜிட்டல் கொள்ளையன் என்பது தெரியவந்துள்ளது.

₹20 கோடி கொள்ளை மற்றும் இரட்டை வாழ்க்கை

காவல்துறை ஆணையர் வி.சி. சஜ்ஜனார் அளித்த தகவலின்படி, கைது செய்யப்பட்ட ரவியின் சேமிப்புக் கருவிகளில் இருந்து சுமார் 21,000 திருட்டுப் படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றில் பழம்பெரும் ஆங்கிலத் திரைப்படமான 'Godfather' முதல் சமீபத்திய தெலுங்குப் படமான 'OG' வரை அடங்கும்.

ரவியின் இரட்டை வாழ்க்கை பலரையும் திகைக்க வைத்துள்ளது.

  • 2022-ல் இந்தியக் குடியுரிமையைத் துறந்து, கரீபியன் தீவுகளில் உள்ள செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸின் குடிமகனாக மாறியிருக்கிறான்.

  • போலிப் பெயரில் பான் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளான்.

  • நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, தாய்லாந்து, பிரான்ஸ் மற்றும் துபாய் போன்ற நாடுகளுக்கு அடிக்கடிப் பயணம் செய்து, சூதாட்ட மற்றும் பந்தய (Betting) செயலி இயக்குநர்களுடன் ரகசியக் கூட்டணி அமைத்திருக்கிறான்.

இவன் தனது பார்வையாளர்களின் தரவுகளைத் திருடி, ஆன்லைன் சூதாட்டத் தளங்களுடன் கைகோர்த்து, இதன் மூலம் மட்டும் சுமார் ₹20 கோடிக்கும் அதிகமாகச் சம்பாதித்துள்ளான் எனப் போலீசார் தெரிவித்தனர்.

ரவியின் சூட்சுமமான வலைப்பின்னல் ரவி தனக்கு எதிராகக் காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் தனது வியாபாரம் நிற்காமல் இருக்க, 110 டொமைன்களை வாங்கி வைத்திருந்தான். இவனுடைய குற்றச் செயல்பாடு மிகவும் நுட்பமானது:
  1. iBomma இணையதளத்தைப் பார்வையிடும் ரசிகர்கள், 1win மற்றும் 1xbet போன்ற ஆன்லைன் சூதாட்டச் செயலிகளுக்குத் திசை திருப்பப்படுவார்கள்.

  2. அங்கே கவர்ச்சிகரமான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, பயனர்கள் தங்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  3. ஒவ்வொரு மாதமும் இவனது இணையதளங்களுக்கு 5 மில்லியன் பயனர்கள் வந்துள்ளனர்.

  4. இவர்களில் கணிசமானோர் சூதாட்டத் தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

  5. Telegram செயலி மூலம் ஹேக்கர்கள் மற்றும் பல்வேறு தளங்களில் இருந்து திருட்டுப் படங்களைச் சேகரித்து, iBomma, BoppamTv போன்ற தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளான்.

  6. பல்வேறு நாடுகளில் அட்மின்களாகச் செயல்படும் கூட்டாளிகள் இவனுக்கு உண்டு.

காவல்துறையின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, iBomma இணையதளம் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டது:

"நீங்கள் எங்களைப் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டிருக்கலாம், அல்லது ஆரம்பத்திலிருந்தே விசுவாசமான ரசிகராக இருந்திருக்கலாம்.

எதுவாக இருந்தாலும், உங்கள் நாட்டில் எங்கள் சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டுவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஏமாற்றத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்.”

முன்னர், ரவி காவல்துறையைப் பார்த்து, "என்னை கைது செய்ய முடியுமானால் செய்யுங்கள், என் செயல்பாடுகளை நிறுத்துங்கள்" என்று சவால் விடுத்திருந்தான். இப்போது அவன் கம்பிகளுக்குப் பின்னால் உள்ளான் என்று ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார்.

இந்தக் காப்புரிமைத் திருட்டு வழக்கில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை: சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை!

அதிகாரிகள் ரவிக்குச் சொந்தமான 35 வங்கிக் கணக்குகளைக் கண்டறிந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் மோசடி: 2024-இல் இந்தியர்கள் இழந்த ரூ.23,000 கோடி!
டிஜிட்டல் பைரசி மற்றும் ₹20 கோடி மோசடியில் சந்தேக நபர் கைது

இந்த வழக்கில் உள்ள பணப் பரிவர்த்தனைகள், சர்வதேசத் தொடர்புகள் மற்றும் கருப்புப் பணப் புழக்கத்தை ஆராய, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் (ED) உதவியை நாடப்போவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

திரைப்பட ரசிகர்களின் தரவுகளைத் திருடி, சர்வதேச சூதாட்ட மாஃபியாக்களுடன் கைகோர்த்து கோடிகளைச் சம்பாதித்த இந்த டிஜிட்டல் மாஸ்டர்மைண்ட்டின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்திருக்கிறது.

இது வெறும் ஒரு கைது அல்ல, திரையுலகிற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றச் சங்கிலியை உடைத்தெறிந்த மகத்தான நடவடிக்கை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com