புது டெல்லியில் மழையால் விமான போக்குவரத்து முடங்கியது.டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வர வேண்டிய 22 விமானங்கள் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப் பட்டன. இதனால் இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் பலரும் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.
கடும் கோடை வெயில் தகித்து வந்த நிலையில் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த மழை கொட்டியது.
டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன், வெளுத்து வாங்கிய இந்த மழையால் ரோடுகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பல்வேறு தவிப்புக்கு ஆளானார்கள்.
டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பல்வேறு கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இந்த மழையால் விமான போக்குவரத்தும் முடங்கியது.
பல்வேறு நகரங்களில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்த 22 விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. லக்னோ, ஜெய்ப்பூர், டேராடூன், அகமதாபாத், சண்டிகர் ஆகிய விமான நிலையங்களுக்கு இந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் அதில் பயணம் செய்த விமான பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.
கடும் கோடையில் பெய்த திடீர் மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் . இந்த திடீர் மழையால் சடுதியில் டெல்லி மாநகரம் குளுமையாக மாறியது.