சீனாவில் காலியாக உள்ள 39 ஆயிரம் சிவில் பணியிடங்களுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் தேர்வு எழுதிய சம்பவம் உலகளவில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
உலகெங்கிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆட்டிப்படைத்தாலும், அவர்கள் அனைவருக்கும் சவால் விடும் வகையில் ஆசியாவிலிருந்து உலகம் முழுவதும் பல நிறுவனங்களை தொடங்கியுள்ளது சீனா. இப்போது சீன நிறுவனங்களின் பொருட்கள் இல்லாத நாடே கிடையாது. அந்த அளவுக்கு நாட்டு மக்களின் உழைப்பை பயன்படுத்தி அதை உற்பத்தியாக மாற்றி மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது அந்நாடு.
இந்நிலையில் அந்த நாட்டில் தற்போது வேலையின்மை மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. உலகிலேயே இரண்டாவது பொருளாதார நாடாக திகழும் சீனா, கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்றுவரை முழுமையாக மீளவில்லை. சமீபத்தில் அங்கு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில், நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, மொத்தம் 39,600 காலி பணியிடங்களுக்கு சுமார் 25 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த நிகழ்வு அந்த நாட்டில் உள்ள வேலையின்மை பிரச்சனையை தெளிவாகக் காட்டுகிறது என பல விவாதங்கள் எழுந்துள்ளது.
இதற்கு காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால், சீனாவில் உள்ள பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் திடீரென வேலையை விட்டு ஆட்களை நிறுத்தி விடுகிறார்கள். அதுமட்டுமின்றி போதிய ஊதியமும் தராததால், பெரும்பாலான இளைஞர்கள் அரசு வேலையில் கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளனர். அதன் காரணமாகவே அரசு வேலைக்கு அதிக அளவிலான நபர்கள் தேர்வு எழுதுகிறார்களாம். அரசு வேலையில் பணியமர்த்தப்பட்டால் அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்படும் என்று சீன மக்கள் கூறுகின்றனர்.
சீன அரசு மீதான விமர்சனங்களுக்கு அந்நாட்டு ஊடகம் தரப்பில் சில விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் அரசு பணிக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த ஆண்டு 37,000காலி பணியிடங்களை அறிவித்த அரசு, இந்த ஆண்டு 39000 காலி பணியிடங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இருப்பினும் அந்நாட்டு இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்ட நிலையை எண்ணி சீன அரசு மீது பலர் தங்களுடைய விமர்சனக் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.