

தமிழகத்தின் லால்குடி தொகுதியைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் மார்ட்டின்.
தமிழகத்தின் வில்லிவாக்கம் தொகுதியைச் சேர்ந்த TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா.
புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதியைச் சேர்ந்த LJK வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.
இந்த மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுவான அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் இவர்கள் மூவரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
இரண்டாவதாக, தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரும், தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) வாயிலாக அரசியல் கட்சிகளுக்குப் பெருமளவில் நிதி அளித்தவரும், இந்தியாவின் 'லாட்டரி மன்னர்' என்று அழைக்கப்படுபவருமான சாண்டியாகோ மார்ட்டினின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் மூவரும்.
மார்ட்டினின் மனைவி, மகன் மற்றும் மருமகன் ஆகிய மூவரும், மூன்று வெவ்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு, தத்தம் தொகுதிகளில் வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளனர்.
பிரபல லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், ஐஜேகே (IJK) கட்சியில் 14 ஆண்டுகள் பணியாற்றிய அவர் சமீபத்தில் தான் அதிமுகவில் சேர்ந்தார். இணைந்த சில நாட்களிலேயே, அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அவரை திருச்சி மாவட்டம் லால்குடியில் அதிமுக சார்பில் களம் இறக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதில் அவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் திமுக கோட்டையான லால்குடி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (அதிமுக) திரும்பியது. 2026 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அதிக சொத்து மதிப்புடையவர்களில் ஒருவராக அறியப்படுகிறார் (சுமார் 6000 கோடி ரூபாய் குடும்ப சொத்து மதிப்பு).
இவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா, சென்னை வில்லிவாக்கத்தில் தவெக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அர்ஜுனா 17,302 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் கார்த்திக் மோகனையும், 47,107 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் விஜயகுமார் எஸ்ஆரையும் தோற்கடித்தார்.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் திமுக அந்த இடத்தைக் கைப்பற்றியிருந்தது. ஆதவ் அர்ஜுனா, ஆரம்பத்தில் திமுகவில் தனது பயணத்தைத் தொடங்கி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து, பின்னர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இவர் 'அரைஸ் கேப்பிட்டல்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், 'வாய்ஸ் ஆப் காமன்ஸ்' என்ற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.
இதேபோல் லீமாரோசின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் லட்சிய ஜனநாயன கட்சியை தொடங்கி புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக காமராஜர் நகரில் போட்டியிட்டு 16,592 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.கே. தேவதாஸ் மற்றும் TVK-வைச் சேர்ந்த சுமன் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி, 10,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முத்திரை பதித்து சட்டசபைக்கு செல்கிறார்.
புதுச்சேரியில் ஜே.சி.எம் என்ற அறக்கட்டளை மூலம் கடந்த ஓராண்டாக ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செய்து வருகிறார்.
இவ்வாறு 2026 தமிழக சட்டசபை தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெற்றி வாகை சூடி எம்.எல்.ஏ.வாகி உள்ளனர்.