சென்னையில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பதாக கடந்த சில மாதங்களாகப் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இது குறித்து பொதுமக்கள் பலர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. கடந்த 21 நாட்களில் மட்டும் ஏறதாழ 30,000 தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டு, மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 11 அன்று, உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது எட்டு வாரங்களுக்குள் செய்யப்பட வேண்டும் என்றும், தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் தெருவில் விடக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும், நாய்கள் காப்பகங்களில் அடைக்கப்படும்போது அவற்றின் நலன் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
இந்த எதிர்ப்புகளுக்குப் பிறகு, மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு புதிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அந்த அமர்வு, ஆகஸ்ட் 11 அன்று பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவை மாற்றியமைத்தது. புதிய உத்தரவின்படி, தெருநாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து, தடுப்பூசி போட்ட பிறகு, மீண்டும் அதே பகுதியில் விட்டுவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், தெருக்களில் நாய்களுக்கு உணவு அளிப்பதைத் தடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பணியாளர்களைத் தடுக்கும் விலங்கு ஆர்வலர்கள் ₹25,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தெரு நாய் தொல்லைகள் குறித்து பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தன்னுடைய விசாரணைக்கு மாற்றி உள்ளது. இது, நாடு முழுவதும் பொருந்தும் வகையிலான ஒரு பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இப்படியான நிலையில் சென்னை மாநகராட்சியில் சுமார் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாகக் கடந்த ஆண்டு கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக வெறிநாய்க்கடி நோய் பரவாமல் தடுப்பதற்கும், சென்னையை வெறிநாய்க்கடி நோய் இல்லாத நகரமாக மாற்றுவதற்கும் சென்னை மாநகராட்சி ஒரு சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியது. அதன்படி, மாநகரில் உள்ள அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்பட்டது.
கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்தத் திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக, மணலி, மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் இந்த முகாம் நடைபெற்றது.
செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 2-ஆம் தேதி வரையிலான 21 நாட்களில், 29,748 தெருநாய்கள் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.