இதுவரை பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்கு எதுவென்று கூகுளிடம் கேட்டால் அது நீலத் திமிங்கலம் என்று தான் சொல்லும். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் அதைவிட பெரிய விலங்கு ஒன்று பூமியில் வாழ்ந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்தில் பெரு நாட்டில் Perucetus Colossus என்ற ஆரம்பகால திமிங்கலம் ஒன்றின் புதைப்படிவம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்ததில் அந்த விலங்கு சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்தது தெரியவந்தது. இது நீலத்துமிங்கலத்தை விட மிகப் பெரியதாக இருந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதன் உயரம் சுமார் 66 அடி இருந்திருக்கும் என்றும், எடை 340 மெட்ரிக் டன்கள் வரை இருந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது இன்றைய காலத்தில் இருக்கும் திமிங்கலம் மற்றும் மிகப்பெரிய டைனோசர்களை விட பெரியதாகும். எனவே இதற்கு பெரிய பெருவியன் திமிங்கலம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஆராய்ச்சி யாளர்கள் இந்த விலங்கின் முக்கிய அம்சமே அதன் அதிக எடை தான். இந்த விலங்கு நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பண்புகளைக் கொண்டிருந்ததாகக் கூறுகின்றனர்.
இதுவரை பூமியில் அறியப்பட்ட மிகப்பெரிய திமிங்கலத்தின் எடை 190 டன் எடையைக் கொண்டிருந்தாலும், உயரத்தை வைத்து பார்க்கும்போது இந்த புதிய விலங்கே மிகப்பெரியதாக இருந்திருக்கும். இந்த விலங்கு சார்ந்த எலும்புக்கூடுகள் தெற்கு பெரு நாட்டின் கடலோரப் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப் பட்டது. இந்த பகுதி முழுவதுமே அதிகமான திமிங்கலப் புதைப் படிவங்களால் நிறைந்துள்ளது.
இதுவரை விஞ்ஞானிகள் அந்த பிரம்மாண்ட விலங்கின் 13 முதுகெலும்புகள், 4 விலா எலும்புகள் மற்றும் அதன் இடுப்பு எலும்பு ஆகியவற்றைத் தோண்டி எடுத்துள்ளனர். இந்த எலும்புகள் வழக்கத்திற்கு மாறாகவும், மிகப் பெரியதாகவும், அடர்த்தி அதிகம் கொண்டதாகவும் காணப்பட்டது. தோண்டி எடுக்கப்பட்ட எலும்பின் எடை மட்டுமே 5 - 8 டன்கள் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. இது நீலத் திமிங்கலத்தின் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
மேற்கொண்டு அந்த விலங்கைப் பற்றி அறிய, தோண்டி எடுக்கப்பட்ட புதைப் படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு முடிவுகள் வெளிவந்தால், அந்த பிரம்மாண்ட விலங்கு பற்றிய மேலும் பல உண்மைகள் வெளிவரும் எனச் சொல்லப்படுகிறது.