நாட்டில் 5 கோடி வழக்குகள் நிலுவை; மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ!

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ
மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ
Updated on

நாட்டில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், நாட்டிலுள்ள நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை எனவும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். ஏற்கெனவே நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய இவர், இப்போது நீதித்துறையை இவ்வாறு விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை நேற்று திறந்து வைத்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது:

நாட்டில் கிட்டதட்ட 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது சவாலாக உள்ளது. உயர்நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு விவகாரங்களை அந்தந்த மாநில அரசுகள்தான் கவனித்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த மாற்றங்கள் விரைவில் நடக்க வேண்டும்.

கூடிய விரைவில் இந்திய நீதித்துறை என்பது காகிதமற்றதாக மாறிவிடும். வழக்கறிஞர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். நீதித்துறை முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாகப்போகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் சாத்தியமானாலும் கூட நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 5 கோடியாக இருக்கிறது. எனவே வழக்குகளை விரைந்து தீர்க்க நீதிபதிகள் தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

-இவ்வாறு அவர் பேசினார். 

logo
Kalki Online
kalkionline.com