

இந்தியாவில் உள்ள சாலைகளில் ஓடும் வாகனங்களில் சுமார் 70 சதவீதம் வாகனங்கள் முறையான ஆவணகள் இன்றியும், போக்குவரத்து விதிகளை மீறியும் இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் வகையில் 17 கோடி வாகனங்களின் பதிவை ரத்து செய்ய மத்திய அரசு அதிரடி திட்டத்தை தொடங்கி உள்ளது.
மத்திய சாலை போக்குவரத்துதுறை அமைச்சகம் சமீபத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.
அதன்படி இந்தியச் சாலைகளில் 40.7 கோடி எண்ணிக்கையிலான வாகனங்கள் ஓடுகின்றன. அவற்றில் சுமார் 17 கோடி வாகனங்கள் விதிகளை மீறியவை, அதாவது தகுதியான ஆவணங்களை கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் பரிந்துரையை மாநிலங்கள் ஏற்றால் நாட்டின் 17 கோடி வாகனங்களின் பதிவு ரத்தாகும் வாய்ப்புள்ளது. மத்திய அரசு தனது பரிந்துரையில், இதுபோன்ற வாகனங்கள் குறித்த புள்ளி விவரங்களை மாநில அரசுகளுக்கு பகிர்ந்துள்ளது.
விபத்துக்களை குறைக்கவும், சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும், இத்தகைய வாகனங்களின் பதிவை படிப்படியாக ரத்து செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு பகிர்ந்துள்ள புள்ளி விவரங்களின் படி தமிழகத்தில் ஓடும் வாகனங்களில் சுமார் 40 சதவீதம் வாகனங்கள் குறைபாடுள்ள ஆவணங்களுடன் இயங்குகின்றன.
இதுபோல் குறைபாடுள்ள ஆவணங்களுடன் தமிழ்நாட்டில் சுமார் 40% வாகனங்கள் ஓடுவதாகவும் புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. இதே போன்ற நிலை தான் கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலவுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே தெலங்கானாவில் மட்டுமே பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 20% என குறைபாடுடைய ஆவணங்களுடன் வாகனங்கள் உள்ளன.
இந்த வாகன உரிமையாளர்களுக்கு தங்களது ஆவணங்களை சரிசெய்ய ஒருகுறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்கவும், தவறும் பட்சத்தில் பதிவை ரத்து செய்யவும், ஒரு புதிய அமைப்பை உருவாக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அமைச்சகத்தின் முன்மொழிவின்படி, வாகன உரிமையாளர்கள் தம் ஆவணங்களின் குறைபாடுகளை சரிசெய்யவில்லை எனில், அதன் பதிவுகள் படிப்படியாக ரத்து செய்யப்படும்.
வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன தகுதி சான்றிதழ், மாசு கட்டுக்காட்டு சான்றிதழ், காப்பீடு ஆகியவற்றை ஒரு வருடத்திற்குள் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களின் வாகனம் தற்காலிகமாகப் பதிவு நீக்கப்பட்ட பிரிவில் வைக்கப்படும். ஒருவேளை இரண்டு ஆண்டுகளாகியும் இந்த ஆவணங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்றால் அந்த வாகனம் நிரந்தரமாகப் பதிவு நீக்கப்பட்ட பிரிவில் வைக்கப்படும். இவ்வாறு நிரந்தரமாக பதிவு நீக்கப்பட்ட வாகனத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது மிகவும் கடினம்.
நிரந்தரமாக பதிவு செய்யப்பட்ட ஒரு வாகனத்தை மீண்டும் சாலைக்கு கொண்டு வரவேண்டுமானால் அதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஆணையரின் சிறப்பு ஒப்புதல் தேவைப்படும். எனினும் இதன் ஆவணங்களின் குறைபாடுகள், நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். இந்த நடைமுறைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் கணக்கிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்பதால் இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே வாகன உரிமையாளர்கள் அபராதத்தை தவிர்க்கவும், வாகன பதிவை தக்கவைக்கவும் உடனடியாக ஆவணங்களை புதுப்பிப்பது அவசியமாகும்.