

காரைக்கால் பகுதியை அடுத்த வாஞ்சூர் கடற்கரையில் ஒதுங்கிய 80 அடி திமிங்கலத்தை அங்கிருந்த மீனவர்கள் காப்பாற்றி நடுகடலில் கொண்டுசேர்த்துள்ளனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது;
காரைக்கால் வாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்தில் தொழிலாளர்கள் சனிக்கிழமை காலை கரையோரத்தில் திமிங்கலம் ஒன்று வழி தப்பி சிக்கி இருப்பதைக் கண்டு மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். திமிங்கலத்தால் மீண்டும் கடலுக்குச் செல்ல முடியவில்லை.
அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறுகள் மூலம் திமிங்கலத்தை மோட்டார் பொருத்தப்பட்ட படகுகளில் இணைத்து சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக கடலுக்குள் இழுத்துச் சென்றனர். ஒருவழியாக அவர்கள் திமிங்கலத்தை நடுக்கடலில் விட்டு விட்டு வெளியேறினர்.
மோக்கா புயல் காரணமாக கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் திமிங்கலம் கரை ஒதுங்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.