அணையில் விழுந்த செல்போனை கண்டுபிடிக்க அணையின் மொத்த நீரையும் வெளியேற்றிய அரசு அதிகாரி!

அணையில் விழுந்த செல்போனை கண்டுபிடிக்க அணையின் மொத்த நீரையும் வெளியேற்றிய அரசு அதிகாரி!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

த்தீஸ்கர் மாநிலம், கான்கேர் மாவட்டத்தில் உள்ளது கேர்கட்டா அணை. இந்த மாவட்டத்தில் உணவு அதிகாரியாகப் பணியாற்றுபவர் ராஜேஷ் விஷ்வாஸ். இவர் தனது குடும்பத்துடன் இந்த அணை அருகே பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார். அப்போது செல்பி எடுத்தபோது, அவரது செல்போன் அணையில் தவறி விழுந்து விட்டது. இந்த செல்போனின் மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

அணையில் விழுந்த போனை கண்டுபிடிக்க உள்ளூர்வாசிகளை அணையில் இறக்கித் தேடினார். ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அந்த அதிகாரி அணையின் மொத்த தண்ணீரையும் வெளியேற்ற இரண்டு பம்புகளைக் கொண்டு வந்து மூன்று நாட்கள் தொடர்ந்து இடைவிடாமல் மொத்த தண்ணீரையும் வெளியேற்றி இருக்கிறார். இதன் மூலம் 1500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் அளிக்கக்கூடிய 21 லட்சம் லிட்டர் தண்ணீரை அவர் வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் செய்த புகாரைத் தொடர்ந்து, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்ததையடுத்து நீரை வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டது.

அங்கு வந்த அதிகாரிகளிடம் ராஜேஷ் விஷ்வாஸ், ‘‘தனது செல்போனில் அரசுத் தகவல்கள் இருப்பதாகவும் அதற்காக எந்த விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்” என்றும் கூறி இருக்கிறார். அதைத் தொடர்ந்தும் அணை நீர் இறைக்கப்பட்டு இருக்கிறது. அதையடுத்து, அவரது செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், அந்தப் போன் வேலை செய்யவில்லை. இந்தச் சம்பவம் குறித்து பதிலளித்த மாநில அமைச்சர் அமரஜீத் பகத், இந்தச் சம்பவம் குறித்து தனக்குத் தெரியாது. ஆனாலும், உண்மையின் அடிப்படையில் அந்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com