கேதார்நாத் கோயிலில் அமைக்கப்படும் பிரம்மாண்ட, ‘ஓம்’ வடிவச் சிற்பம்!

கேதார்நாத் கோயிலில் அமைக்கப்படும் பிரம்மாண்ட, ‘ஓம்’ வடிவச் சிற்பம்!

சொர்க்கத்தின் நுழைவு வாயில் எனக் கருதப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கேதர்நாத் கோயில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டுமே திறந்திருக்கும். இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானதாக விளங்குகிறது இந்தக் கோயில். வருடத்தில் மிக அதிக நாட்கள் பனிப்பொழிவிலேயே நனையும் இந்தக் கோயிலில் பிரணவ மந்திரமான, ‘ஓம்’ எனும் வார்த்தையை ஐம்பது டன் எடையில் சிற்பமாக அமைக்க இந்தக் கோயில் நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது. இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து திறக்கப்பட்டு விடும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

செம்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகக் கலவையால் உருவாக்கப்பட்டு, பன்னிரெண்டு பாகங்களாக தனித்தனியே இருக்கும் இந்த, ‘ஓம்’ சிற்பம், டிராக்டர் மூலம் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. கோயிலில் வைத்து அவை ஒன்றாக இணைக்கப்பட்டு நிறுவப்படும். இந்த ஓம் சிற்பம் கேதார்நாத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் நிறுவப்படும். இந்தச் சிற்பத்தை உருவாக்கத் தேவையான செம்பும் பித்தளையும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இந்த, ‘ஓம்’ சிற்பம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறைப் பொறியாளர் ஜிதேந்திரா கூறுகையில், “ஓம் சின்னத்தை வைப்பதற்கான ஒத்திகைகள் முடிவடைந்து இன்னும் இரண்டு வாரத்தில் இந்த சிற்பம் நிறுவப்பட்டுவிடும்” என்று தெரிவித்தார்.

கேதார்நாத் கோயில் பஞ்சபாண்டவர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பாண்டவர்கள் குருக்ஷேத்ர போருக்குப் பிறகு போரில் தங்களது உறவினர்களைக் கொன்ற பாவத்தில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டி சிவபெருமானை வழிபட இப்பகுதிக்கு வந்தனர். ஆனால், அவர்களை மன்னிக்க சிவபெருமான் விரும்பாததால் அவர்கள் இமயமலையிலேயே சுற்றிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சிவபெருமானும் இப்பகுதியிலேயே பசு வடிவத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். எனவே, அவர்கள் இங்கே ஈசனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினர். அதன் பிறகு 8வது நூற்றாண்டில் ஆதிசங்கரரால் இக்கோயில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்தக் கோயிலின் கருவறை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com