50 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி, தனது 89 வயதில் இரண்டரை கோடி பரிசு வென்ற நபர்.

50 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி, தனது 89 வயதில் இரண்டரை கோடி பரிசு வென்ற நபர்.

ஞ்சாபில் உள்ள லோகர் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் 89 வயதான குருதேவ் சிங் தனது வாழ்நாள் முழுவதையும் மோசமான சூழ்நிலையில் கழித்துள்ளார். கூலி வேலை செய்து வரும் இவர் 25 ஆண்டுகளாக ரிக்க்ஷா ஓட்டி வருகிறார். ஆனால் தற்போது குருதேவ் சிங், 2.5 கோடி ரூபாய் லாட்டரியில் வென்று திடீர் கோடீஸ்வரராக மாறியுள்ளார். தற்போது அவருடைய குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். 

இதுகுறித்து குருதேவ் சிங் கூறியதாவது, 

"நான் கிட்டத்தட்ட 40, 50 வருஷமா லாட்டரி சீட்டு வாங்கிட்டு வந்தேன். வேலைக்குப் போகும்போது தான் லாட்டரி சீட்டு வாங்குவேன். இதுவரை ஒரு முறை கூட பரிசு விழுந்ததில்லை. அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கி, குலுக்கல் தேதி முடிந்ததும் அவற்றை வீசி விடுவேன். நான் ஜெயித்தேனா இல்லையா என ஏஜெண்ட்களிடம் இதுவரை கேட்டதில்லை. நான் இதுவரை ஜெயித்ததில்லை என்பதால் கடந்து சில ஆண்டுகளாக லாட்டரி சீட் வாங்காமல் இருந்து வந்தேன். ஆனால் சில நாட்களுக்கு முன்னாடி நான் ஊருக்கு போனேன். கடைசியா ஒரு முறை வாங்கி பார்க்கலாம் என நினைத்து வாங்கிய போது எனக்கு இந்த பரிசு விழுந்துள்ளது. எனக்கு பரிசு கிடைத்த செய்தியை ஏஜெண்ட்கள் வந்து என்னிடம் சொல்லவில்லை என்றால் எனக்குத் தெரிந்திருக்காது". 

இரண்டரை கோடி ரூபாய் வென்ற பிறகும் அவருக்கு பெரிய கனவுகளோ திட்டங்களோ எதுவுமில்லை. அவர் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை குடிசை வீட்டிலேயே கழித்துள்ளார். ஏழ்மை நிலையில் இருந்தாலும் அதைப்பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை, மகிழ்ச்சியாகவே வாழ்ந்ததாக சொல்கிறார். எனவே அவருடைய கனவுகள் வீடு குறித்தே இருக்கிறது. தனது பிள்ளைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இரண்டு அறைகள் கொண்ட வீடு கட்ட வேண்டும் என்பதே அவரின் தற்போதைய ஆசையாக இருக்கிறது. 

குருதேவ் சிங் மரம் நடுவதை விரும்புபவர், இதுவரை சாலையோரங்களில் அதிகப்படியான மரங்களை நட்டுள்ளதாகவும், கிடைத்திருக்கும் பணத்தை வைத்து மேலும் அதிக மரங்களை நட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பல இடங்களில் கூலித் தொழிலாளியாகவும், பணியாளராகவும் பணிபுரிந்த இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரிக்க்ஷா ஓட்டி வருகிறார். என்னதான் தனக்கு தற்போது பணம் கிடைத்தாலும், நான் தினசரி செய்து வரும் ரிக்க்ஷா தொழிலை விடப் போவதில்லை என மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார்.

கிடைத்திருக்கும் பணத்தை வைத்து மேலும் லாட்டரி சீட்டு வாங்குவீர்களா எனக் கேட்டதற்கு" தற்போது கிடைத்திருக்கும் பணமே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்னும் அதிகபட்சம் ஒரு 10 ஆண்டுகள் நான் வாழலாம். இனி இருக்கும் காலத்தை மகிழ்ச்சியாக கழிக்க விரும்புகிறேன். ஒருபோதும் லாட்டரி சீட்டு வாங்க மாட்டேன்" என சிரித்தபடியே சொல்கிறார் குருதேவ் சிங்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com