இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் பள்ளியின் முதல் மதிப்பெண் எடுத்த தன்னம்பிக்கை மாணவர்.

இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் பள்ளியின் முதல் மதிப்பெண் எடுத்த தன்னம்பிக்கை மாணவர்.

மீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய மாணவ மாணவிகள், மதிப்பெண்கள் குறைவு தேர்வில் தோல்வி போன்ற விசயங்களை ஏற்று அடுத்த கட்டத்திற்கு செல்லும் மாணவச் செல்வங்களும் உண்டு. இடையில் தற்கொலையை நாடும் மாணவர்களும் இருப்பது வேதனை தரும் விசயமாக உள்ளது.

ஆனால் இரண்டு கைகளும் இல்லாத நிலையிலும் 437 மதிப்பெண்களுடன் பள்ளியின் முதல் மாணவராக வந்து சாதனை படைத்து முதல்வரின் பாராட்டுகளுடன் அரசு உதவியையும் பெறப் போகிறார் ஒரு மாணவர். அந்த தன்னம்பிக்கை மாணவர்...

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கஸ்தூரி, அருள் மூர்த்தி தம்பதியினர். இவர்களது மகன் கீர்த்தி வர்மா. இவர் நான்கு வயதில் வீட்டின் மாடியில் விளையாடிய போது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டிச் சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி கீர்த்தி தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார். மகனின் இந்த நிலையைக் கண்டு அருள் மூர்த்தி வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

இதனால் வாழ்வதற்க்கான எந்த ஆதாரமும் இல்லாததால் கஸ்தூரி தனது இரண்டு கைகள் இல்லாத மகனுடன் வேப்பனபள்ளி அருகே உள்ள ஜீனூர் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்துள்ளார். இரண்டு கைகளும் இல்லை என்றாலும் தன்னம்பிக்கையைக் கைவிடாத கீர்த்தி வர்மா நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவன் கீர்த்திவர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இரண்டு கைகள் இல்லா விட்டாலும் தன்னம்பிக்கையுடன் போராடி சாதனை படைத்த மாணவரை அவரது தாய் கஸ்தூரி மற்றும் ஆசிரியைகள் இனிப்பு ஊட்டி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

     இது குறித்து மாணவன் கீர்த்தி வர்மா கூறுகையில் “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண் பெற்றுள்ளேன். இந்த மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

        மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்திவர்மாவின் சாதனைகள் அறிந்த  முதலமைச்சர் மு க ஸ்டாலின், கீர்த்தி வர்மாவின் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.  மேலும் அந்த மாணவனுக்கு செயற்கை கைகள் பொருத்துவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும் அரசு செய்து தரும் என உறுதி அளித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது

      “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பொது தேர்வு செய்திகளை கவனிக்கும்போது மாணவர் கீர்த்திவர்மாவின் வெற்றி செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் கீர்த்திவர்மாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். அவரது தாயாரை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை  மேற்கொள்ள மக்களின் நல்வாழ்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

      நம்பிக்கையோடு ஒளியென மின்னிடும் மாணவர் கீர்த்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்று சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிறு குறை என்றாலும் துவண்டு போகும் மனிதர்களிடையே கீர்த்தி வர்மாவைப் போன்றவர்கள் முன்மாதிரி நட்சத்திரங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com