2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்துச் சென்றது. இதனால் உலகமே ஸ்தம்பித்து போய் பொருளாதார வீழ்ச்சி, வேலை இழப்பு, பணவீக்கம் போன்றவற்றால் அவதிக்குள்ளானது. இதன் பாதிப்புகள் தற்போது குறைந்துள்ள நிலையில், கொரோனாவை விட கொடூரமான வைரஸ் வரப்போவதாக சீன விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.
சீனாவின் பிரபலமான நுண்ணுயிரியியல் விஞ்ஞானியான 'ஷி ஷெங்லி' என்பவர் எதிர்காலத்தில் கொரோனா வைரஸை விட மிகக் கொடிய வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்கள் பற்றிய ஆய்வுகளில் மிகவும் புகழ் பெற்றவர் இவர். உலக நாடுகள் கொரோனா வைரஸை விட அதி பயங்கர வைரஸை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வரும் இவர், வூஹானில் உள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடத்தின் உருவெடுத்துவரும் தொற்றுநோய் பிரிவின் இயக்குனராக இருந்து வருகிறார். இவரது குழுவினரால் வெளியிடப்பட்ட கட்டுரையில் இன்னும் 40க்கும் மேற்பட்ட வகையான கொரோனா வைரஸ் மனித குலத்தை தாக்க உள்ளதாகவும், இதில் பாதிக்கும் மேற்பட்ட வைரஸ்கள் மிக அபாயமானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா வைரஸ் போலவே மிக பயங்கர நிகழ்வுகள் உலகத்தை தாக்கக்கூடும் என இந்த ஆய்வுக் கட்டுரையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் மக்கள் தொகை, வைரஸ்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் போன்றவற்றின் ஆய்வுகளின் அடிப்படையில் இதை அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இதுபோன்ற ஆய்வுக்காக வூஹான் ஆய்வுக்கூடம் மிக மோசமான வைரஸ்களைக் கொண்டு ஆய்வு நடத்துவதால், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்த ஆய்வுக்கூடத்திற்கான நிதியை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.இந்த விஞ்ஞானி கூறுவது போல், கொரோனா வைரஸ் போல இன்னொரு வைரஸ் தொற்று ஏற்பட்டால், உலக நாடுகள் அதை எப்படி எதிர்கொள்ளும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.