கவனம்..! இனி ஆதார் ஜெராக்ஸ் கேட்டால் சட்ட சிக்கல் வரும் – UIDAI அதிரடி..!!

Aadhaar card
Aadhaar card
ஆர்.சி.ராஜா

வணக்கம்! கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்காக எழுதி வருகிறேன். ஆன்மிகம், அறிவியல், தொழில்நுட்பம், உணவு, சுற்றுச்சூழல் என பல தளங்களில் எழுதுகிறேன். உடல், உளநல ஆரோக்கியத்திற்காக ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை மருத்துவம், யோகாசனம் பற்றிய தகவல்களை எளிய தமிழில் பகிர்கிறேன். சிறந்த மருத்துவர்களின் பேட்டிகள், ஆராய்ச்சி அடிப்படையிலான தகவல்கள், புதிய கண்டுபிடிப்புகளை வழங்கி, மக்களின் நலனை மேம்படுத்துகிறேன். உங்களோடு இணைந்து இந்த பயணத்தைத் தொடர ஆவலாக இருக்கிறேன்!

Updated on

நீங்கள் ஒரு ஹோட்டலில் அறை எடுக்கும்போது அல்லது ஒரு பெரிய நிகழ்வுக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் நிர்வாகம் உங்கள் ஆதார் அட்டையின் ஒரு காகித நகலை (xerox) கட்டாயம் கேட்கும் அல்லவா? 

இந்தக் காகித நகல்களை அவர்கள் எடுத்து, அதை அப்படியே ஆவணங்களாகச் சேமித்து வைப்பதால், உங்கள் ஆதார் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற ஆபத்து இருக்கிறது. 

மேலும், காகித நகல் கேட்பது தற்போதைய ஆதார் சட்டப்படியும் தவறு.இந்தச் சிக்கலைத் தீர்க்கவும், மக்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. 

இனி ஹோட்டல்கள், நிகழ்வு அமைப்பாளர்கள் போன்ற நிறுவனங்கள், வாடிக்கையாளரின் அடையாளத்தை ஆதார் மூலம் சரிபார்க்க விரும்பினால், UIDAI-இல் முறையாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற புதிய விதிமுறையை ஆணையம் விரைவில் கொண்டு வரவுள்ளது.

புதிய தொழில்நுட்பத்திற்கான கட்டாயப் பதிவு

UIDAI-இன் தலைமைச் செயல் அதிகாரி புவனேஷ் குமார், விரைவில் இந்த புதிய விதி முறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த விதிமுறையின்படி:

  1. கட்டாயப் பதிவு: ஆஃப்லைன் சரிபார்ப்பை நாடும் ஹோட்டல்கள் மற்றும் நிகழ்வு அமைப்பாளர்கள் போன்ற நிறுவனங்கள் UIDAI-இல் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

  2. டிஜிட்டல் சரிபார்ப்பு: பதிவு செய்த நிறுவனங்களுக்குப் புதிய சரிபார்ப்பு தொழில்நுட்பத்திற்கான அணுகல் வழங்கப்படும். இதன் மூலம், அவர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமோ அல்லது உருவாக்கப்பட்டு வரும் புதிய ஆதார் செயலியுடன் இணைப்பதன் மூலமோ தனிநபர்களின் அடையாளத்தை எளிமையாகச் சரிபார்க்க முடியும்.

  3. காகித அடிப்படையிலான சரிபார்ப்பை தவிர்த்தல்: காகித அடிப்படையிலான ஆதார் சரிபார்ப்பை ஊக்கமிழக்கச் செய்வதே இந்த புதிய விதியின் முதன்மை நோக்கம் என்று குமார் கூறினார்.

தனியுரிமை பாதுகாப்பு மற்றும் சேவையின் வேகம்

இந்த புதிய சரிபார்ப்பு முறை, பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றும்.

குமார் மேலும் கூறுகையில், "சரிபார்ப்பை எளிதாக்குவதன் மூலம், காகிதமில்லா ஆஃப்லைன் சரிபார்ப்பு மேம்படுத்தப்படும்.

இதனால், பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும் மற்றும் ஆதார் தரவு தவறாகப் பயன்படுத்தப்படவோ அல்லது கசியவோ எந்த அபாயமும் இருக்காது" என்றார்.

இன்னும் வேகம்: இந்த புதிய டிஜிட்டல் முறை அமலுக்கு வரும்போது, ஆதார் தகவல்களைச் சரிபார்க்க மத்திய அலுவலகத்துடன் இணையும் போது ஏற்படும் நெட்வொர்க் சிக்கல்கள் (சர்வர் டவுன் ஆவது) மற்றும் தாமதங்கள் முழுமையாகத் தவிர்க்கப்படும்.

இதனால், சரிபார்ப்பு மிக வேகமாக முடிந்து, பயனர்களுக்கு சிறப்பான சேவைக் கிடைக்கும்.

UIDAI தற்போது ஒரு புதிய செயலியை பீட்டா-சோதனை செய்து வருகிறது. இந்தச் செயலி, ஒவ்வொரு சரிபார்ப்புக் கோரிக்கைக்கும் மத்திய சேவையகத்துடன் இணையத் தேவையில்லாமல், 'செயலி-க்கு-செயலி' (app-to-app) சரிபார்ப்பை செயல்படுத்த உதவுகிறது.

புதிய விதிகள் அமலாகும் போது, ஆஃப்லைன் சரிபார்ப்பை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, தங்கள் அமைப்பை ஆதார் சரிபார்ப்புக்கு ஏற்றவாறு புதுப்பிக்க API-ஐ (Application Programming Interface) வழங்கவும் UIDAI திட்டமிட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com