அறிவியல் வசதிகள் பெருகப் பெருக மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருக்கும் மின் சாதனங்களும் அதிகரித்து வருகிறது. அரைக்க மிக்சி, பாதுகாக்க பிரிட்ஜ்,துவைக்க வாஷிங் மெஷின் வரிசையில் கோடை காலத்தில் குளிர்விக்க ஏ.சியும் இணைந்து தற்போது சிறிய வீடெனினும் ஏசி (Air Conditioner) அவசியம் உள்ளது.
சீசன் விற்பனை என்பதால் இந்தியாவில் கோடை காலத்தில் ஏசி வாங்கும் மக்கள் அதிகரிப்பதால் நிறுவனங்கள் விலையை உயர்த்தி கோடையில் வழக்கத்தை விட சற்றே கூடுதலாக இருப்பது வழக்கம்தான். ஆனால் இந்த வருடம் கோடை காலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்னரே இந்தியாவில் ஏ.சி(AC) களின் விலையை 5%–15% வரை உற்பத்தியாளர்கள் உயர்த்தியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு பல பொருளாதார மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் கூறப்படுகின்றன.
விலையேற்றத்தின் காரணம் என்ன?
குளிரூட்டும் வாயுவை (refrigerant) நிர்வகிக்கும் Compressor, வெப்பத்தை வெளியேற்றும் Condenser, அழுத்தத்தை குறைக்கும் Expansion Valve, அறைக்குள் குளிர்ந்த காற்றை வெளியிடும் Evaporator Coil போன்ற உபகரணங்கள் ஏசியில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தாமிரம் ,அலுமினியம் ,இரும்பு (Copper, Aluminium, Steel ) போன்ற உலோகங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் Copper விலை உலக சந்தையில் அதிகரித்ததால் தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பல ஏசி உதிரி பாகங்கள் (spare parts) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாலும் , டாலருடன் ஒப்பிடும்போது ரூபாய் மதிப்பு குறைந்ததால் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதாகவும் , இந்த ஆண்டு (2026) முதல் BEE energy star rating புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டு அதிக மின்சார சேமிப்பு தரும் புதிய தொழில் நுட்பத்தால் தயாரிப்பு செலவு உயர்ந்துள்ளதாகவும் இவற்றுடன் அதிகரித்து வரும் போக்குவரத்து & லாஜிஸ்டிக்ஸ் செலவுகளாலும் உலகளவில் ஏசி விலையும் உயர்ந்துள்ளது என்கின்றனர்.
இத்தகைய விலை உயர்வுகளை தொழில்நுட்ப மாற்றங்கள் மூலம் நிறுவனங்கள் கட்டுப்படுத்தி உரிய விலையை நுகர்வோருக்கு தரும் என்றாலும் இந்த முறை மூலப்பொருள்களின் விலை உயர்வும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் சேர்ந்து விலையேற்றம் நிகழ இரட்டை பாதிப்புகளாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவின் ஏ.சி. சந்தை சுமார் 13.5 மில்லியன் யூனிட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கோடை வெயில் முன்கூட்டியே தொடங்கும் என்ற கணிப்பு இருக்கும் நிலையில் இந்த விலை உயர்வு குறித்த செய்தி அதிர்ச்சியளித்தாலும், ஏசி விற்பனை குறையும் வாய்ப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.