

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்துவதும், அதற்கு ஈரான் பதிலடி கொடுப்பதுமாக இருந்து வருகிறது. ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீதும், அமெரிக்கா கூட்டு நாடுகளான பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி, துபாய் மீதும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த சமயத்தில் அஜித்குமார் அவர்கள் துபாயில் கார் பந்தயத்திற்காக தங்கி இருந்தார். துபாயில் தாக்குதல்கள் நடைபெறுவதால் அவரால் சென்னை திரும்ப முடியாமல் போய்விட்டது.
அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித்குமார் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாதுகாப்பாக இந்தியா திரும்பிய அஜித்குமாருக்கு உலகின் முதல் Formula E Themed SUV காரை மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் திரு. ஆர். வேலுசாமி பரிசாக வழங்கினார். இது அஜித்குமாருக்கு கார் ரேசிங் மீதான ஆர்வத்தை பாராட்டும் வகையில் பரிசாக வழங்கப்பட்டது.
ஃபார்முலா E பந்தயக் கார்களின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு புதிய எடிஷனின் டிசைன் எலமென்ட்களை வடிவமைத்திருக்கிறது மஹிந்திரா. எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே பங்கெடுக்கும் ஃபார்முலா இ பந்தையங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன. அதில் கடந்த 12 ஆண்டுகளாக மஹிந்திராவும் ஒரு போட்டியாளராக பங்கெடுத்து வருகிறது. எனவே அதனைக் குறிப்பிடும் வகையில், ஃபார்முலா இ கார்களில் பயன்படுத்தும் வகையிலான டிசைன் மற்றும் சில அம்சங்களுடன் அமைந்துள்ளது இந்த கார். டேங்கோ ரெட், ஸ்டெல்த் பிளாக், ஆரஞ்சு மற்றும் எவரெஸ்ட் ஒயிட் ஆகிய நான்கு நிறங்களில் வந்துள்ளது.
விளையாட்டுத் துறையிலும், மற்ற துறைகளிலும் புதிய சாதனைகள் படைக்கும் பலருக்கும் மஹிந்திரா நிறுவனம் கார்களை பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.