

"அடுத்த எம்ஜிஆர் விஜய் ..இரண்டு கோடி பேர் ஓட்டு போட்டுள்ளனர் . விஜய் எப்போது பதவி ஏற்பார் என குழந்தைகள் குமுறுகிறார்கள். ஆளுநர் உடனடியாக விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அதிமுக எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என திரைக் கலைஞரும் குணச்சித்திர நடிகருமான தம்பி ராமையா உருக்கத்துடன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது .
தமிழ்நாட்டில் எப்போதுமே திராவிட கட்சிகள் மட்டுமே அரசியலில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில் நடிகர் என்னும் நிலையிலிருந்து அரசியல்வாதியாக மாறி கட்சி துவங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே இளைய தலைமுறையின் ஏகோபித்த வரவேற்பை பெற்று தற்போது தேர்தலில் பெற்ற அதிக இடங்களுடன் தேவையான பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளது விஜய் தலைவராக உள்ள தவெக கட்சி.
ஏற்கனவே திரை உலகில் இருந்து ஏராளமானவர்கள் அரசியலில் இறங்கினாலும் ஆட்சிக்கட்டிலை கைப்பற்றியவர்கள் என்னும் பெருமைக்குரியவர்கள் கலைஞர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் மட்டுமே. இவர்களின் வரிசையில் தற்போது விஜயும் இணைவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்த விடும்.
தேர்தலில் 108 இடங்களை வென்று ஆட்சியமைக்க மேலும் 10 இடங்கள் வேண்டும் என்ற நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது 5 இடங்களைத் தந்து ஆதரவு அளித்து விட்ட நிலையில் தற்போது 113 இடங்களுடன் மேலும் ஐந்து இடங்கள் தேவை எனும் நிலையில் மற்ற கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறது தவெக கட்சி.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் தத்தம் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையா அவர்கள் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .காரணம் குழந்தைகளை முன்னிறுத்தி அவர் கருத்தை தெரிவித்தது தான்.
ஏற்கனவே விஜய்க்கு பெரும்பான்மையான ரசிகர்களாக குழந்தைகள் இருந்த நிலையில் குழந்தைகளை வைத்து அவரவர் வீட்டில் உள்ள பெரியவர்களை ஓட்டு போடும் படி செய்த விஜயின் யுக்தி விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில் தற்போது தம்பி ராமையா விஜய்க்கு ஓட்டு போடாத ஓட்டுரிமை இல்லாத மாணவச் செல்வங்களாகிய குழந்தைகள் விஜய் எப்போது முதல்வர் ஆவார் என்று கேள்வி கேட்பதாகவும் அதில் தனது பேரன் பேத்தியும் அடங்குவர் என்றும் அவர்களுக்காகவாவது ஆளுநர் மனம் வைத்து விஜயை முதல்வராக பொறுப்பேற்க அழைக்க வேண்டும் எனவும் இதற்கு அதிமுக போன்ற கட்சிகள் தங்கள் எம்எல்ஏக்களை தந்து உதவ வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
மேலும் தான் எந்த அரசியல் கட்சியும் சாராதவர் ஆனால் எம்ஜிஆர் மீது அதிக பக்தி உடையவன் என்றும் அடுத்த எம்ஜிஆர் விஜய் தான் என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்றும் அந்த காணொளியில் பேசியுள்ளார். இது குறித்து குழந்தைகளை வைத்து அரசியல் செய்வது முறையல்ல எனும் நோக்கில் அவருக்கு எதிர்ப்பாகவும் , ஆதரவாகவும் பலவித விமர்சனங்கள் இணையதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது.