

பத்திரப்பதிவு, பட்டா மற்றும் வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறைகள் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது அடங்கல் சான்றிதழையும் ஆன்லைனில் விண்ணப்பித்து பெற தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இதன் மூலம் அடங்கல் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க விவசாயிகள் விஏஓ அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் போலியாக அடங்கல் சான்றிதழ் பெறும் பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
விவசாய நிலங்களுக்கு வழங்கப்படும் ஆவணங்களில் மிகவும் முக்கியமானதாக அடங்கல் சான்றிதழ் இருக்கிறது. ஒரு நிலத்தின் சர்வே எண்ணில் எவ்வகையான பயிர் சாகுபடி செய்யப்படுகிறது என்பதைப் பற்றிய தகவலை அளிப்பது தான் அடங்கல் சான்றிதழ்.
பொதுவாக அடங்கல் சான்றிதழுக்கு விவசாயிகள் விண்ணப்பித்த பிறகு, அந்த கிராமத்தில் உள்ள விஏஓ நேரடியாக விவசாய நிலத்திற்கு சென்று என்ன வகையான பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை கள ஆய்வு செய்து அடங்கல் சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் விஏஓ-க்கள் நேரடியாக கள ஆய்விற்கு செல்லாததால், சிலர் போலியாகவே அடங்கல் சான்றிதழை பெற்று வருகின்றனர். இது குறித்த புகார்கள் அதிகரித்த வண்ணம் இருந்தமையால், தற்போது அடங்கல் சான்றிதழையும் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவதற்கான நடைமுறையைக் கொண்டு வர வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாய நிலங்களுக்கு அடங்கல் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயிர் காப்பீடு, வங்கி கடன் பெறுதல, வெள்ளம் மற்றும் வறட்சியின் போது நிவாரணம், மானியம், சொட்டுநீர் பாசனம், மின் இணைப்பு மற்றும் நில உரிமை மாற்றம் உள்ளிட்ட அரசுத் திட்டங்களில் விவசாயிகளால் பயன்பெற முடியும்.
இந்நிலையில் அடங்கல் சான்றிதழை ஆன்லைனில் பெறுவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை கணக்கெடுக்கும் பணி ‘டிஜிட்டல் கிராப் சர்வே (Digital Graph Survey)’ முறையில் நடந்து வருகிறது.
தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, வேளாண் விற்பனைத் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் பயிர் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய ராபி பருவத்தில் இதுவரை விழுப்புரத்தில் 12.27 லட்சம் உட்பிரிவுகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை கணக்கெடுத்து கணினியில் அதிகாரிகள் பதிவேற்றம் செய்துள்ளனர். இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு அடங்கல் சான்றிதழை ஆன்லைனில் பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
அடங்கல் சான்றிதழை ஆன்லைனில் பெற விண்ணப்பிக்கும் போது, விவசாயிகள் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை போட்டோ எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம். இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக விஏஓ அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும் சாகுபடி செய்யாமலேயே போலியாக அடங்கல் சான்றிதழ் பெறும் பிரச்சனையும் முடிவுக்கு கொண்டு வரப்படும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.